எத்தனை எத்தனையோ போராட்டங்கள், சவால்கள், தடைகள். கடந்து
வந்த மாயம் தெரியவில்லை. ஏடுகள் ஒவ்வொன்றாய்ப் புரட்டிப் பார்த்தான் வெற்றிமாறன்.
தொண்ணூற்று ஒன்பது நாள்களில் தொண்ணூற்று ஒன்பது படைப்புகள். தன் இடது கையைக்
கிள்ளிப் பார்த்தான். வலித்தது. நடப்பது நிஜம்தான். இலக்கின் இறுதி நாள். அந்த நாளை
வரவேற்கக் காத்திருப்பது அவனுக்குச் சுகமாய் இருந்தது.
இதுநாள்வரை எழுதியதைவிட நூறாவது கதையைச் சிறப்பாய் எழுதிவிட
வேண்டும். எதை எழுதுவது என்ற முடிவுக்கு வருவதற்கே அவனுக்குப் பல மணி நேரங்கள்
தேவைப்பட்டன. மூளைக்குள் கதை உட்கார மறுத்தது. அவன் விடுவதாய் இல்லை. இலக்கு. அது
மட்டுமே அவன் முடிவான முடிவாய் இருந்தது.
கதைகளைப் படித்து, குறைகளைச் சுட்டிக்காட்டிய முகம் தெரியா
உறவுகளை நினைத்துப் பார்த்தான். மனம் நிறைவாய் இருந்தது. பேனாவெனும் கருவறைக்குள்
சின்னதாய்க் உருவாகிய கதைகள் உருபெற்றபோது, பிரசவிக்கும் வலி தெரியாமல் தன் கரம்பற்றி
நின்ற அண்ணன் தம்பி உறவுகளை எண்ணி அசைபோட்டான். மனத்தில் இன்ப ஊற்றுப்
பெருக்கெடுத்து ஓடியது. அதில் மூழ்கியெழுந்தபோது புனித நீராடிய புத்துணர்ச்சி.
கதையெனும் குழந்தையோடு எதிரில் நின்றபோது உச்சி முகர்ந்து
ஆசிர்வதித்த நட்புகளின் அன்பிற்கு அவன் அப்படி என்ன தந்துவிட முடியும். யோசித்துப்
பார்த்தான். செல்வச் சீமானாய் இருந்திருந்தால் அவர்களுக்கெல்லாம் தங்கக்கிரீடம்
சூட்டி அழகு பார்த்திருப்பான். பாவம்! சாதாரண மானிடன். மனத்திற்குள்ளே நன்றி பாராட்டும்
விழா நடத்தி இன்புற்றுப் போனான். இலக்கின் எண்ணிக்கையோடு நிறுத்தி விடலாமா! உள்ளுக்குள்
விவாத மேடை அரங்கேற்றம் கண்டது. நீதிபதியாய் அவன்.
“எழுது வெற்றிமாறா, எழுது! நிறுத்தி விடாதே! யாருக்காக
இல்லாவிட்டாலும் உனக்காக எழுது! உன் ஆத்ம திருப்திக்காக எழுது! ஆசை தீரும்வரை
எழுது! ஒரு அடியேனும் பின்வாங்கி விடாதே!” சன்னமாய் ஒரு குரல் உள்ளூர ஒலித்துக்
கொண்டிருப்பதை அவன் உணராமல் இல்லை.
மடிக்கணினியின்
முன் அவன். அடுத்த பிரசவத்திற்காகத் தயாராகத் தொடங்கினான். அழைப்பு ஒன்று அவசரமாய்
வந்தது. உறவில் ஒன்று விடைபெற்றுக் கொண்டதாம். பூக்களுள் ஒன்று உதிர்ந்து போனதாம்.
கதையா உறவா? யோசிக்க அவகாசம் தேவைப்படவில்லை அவனுக்கு. மடிக்கணிணி அதன் கூட்டிற்குள்
தஞ்சம் புகுந்து கொண்டது தற்காலிகமாக!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக