செவ்வாய், 8 பிப்ரவரி, 2022

# குறுங்கதை 001 # குசும்பு குமார்

 

குசும்பு குமார்

 

“டேய் மச்சான்...  இன்னைக்கு செம்மையா ஒரு சம்பவம் பண்றோம். சீக்கிரம் வாடா” குதூகலத்துடன் அலைபேசியை வைத்தான் குசும்பு குமார். அரைமணி நேரத்தில் குசும்பு குமார் வீட்டில் ஆஜரானான் அருண்.

“டேய் என்னடா... இன்னைக்கு என்ன வச்சிருக்க...? சொல்லு... செஞ்சிடுவோம்” அருணுக்கு ஆர்வம் தாளவில்லை. கேமராவை எடுத்துக்கொண்டான் குசும்பு குமார். அருணைப் பைக்கில் ஏற்றிக் கொண்டான். போகும் வழியில் திட்டத்தைத் தெளிவாய்ச் சொன்னான். பத்து கிலோமீட்டர் சென்றிருப்பான். நினைத்தபடி ஒரு பூங்கா. குமாருக்குப் பிடித்துப் போனது. பைக்கை அவசரமாய் நிறுத்தினான். குமாரின் எண்ண அலைகளை அறிந்தவனாய்ச் செயல்படத் தொடங்கினான் அருண். அருண், குசும்பு குமாரின் அடிமை. என்றும் திட்டமிடுபவன் குமார். நடத்திக் கொடுப்பவன் அருண். இவர்களுக்கிடையிலான புரிதலை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது.

பூங்காவில் கூட்டம் அதிகம் இல்லை. பொதுவாக மாலை மணி ஐந்துக்கு மேல்தான் கூட்டம் அங்குக் கூடும். அதுவும் ஜோடி ஜோடியாய்ச் சின்னஞ் சிறுசுகள் ததும்பி வழியும் பூங்காக்களுள் இதுவும் ஒன்று என்பது குசும்பு குமாருக்கு நன்றாகவே தெரியும். இதுதான் சரியான தருணம்.  இருவரும் எடுத்து வந்த கேமராவை, வளர்ந்து பெருத்திருந்த மரத்தின் பின்னால் மறைத்து வைத்தனர். குமாருக்கு இன்று திட்டமிட்ட சம்பவத்தை நினைக்கும்போது பெருமையாய் இருந்தது.

இதோ காதலர் கூட்டம் கூடிக்கொண்டே போகிறது. திட்டமிட்ட இடத்தில் திட்டமிட்டபடி ஒரு காதல் ஜோடியை நெருங்குகிறான் குமார்.

“இவன்கூட இங்க என்ன பன்றே? எத்தன நாளா இது நடக்குது? அப்புறம் என்ன ஏன் வரச் சொன்ன?” குசும்பு குமார் ஆவேசமாய்க் கத்த,  காதலன் கதிகலங்கிப் போகிறான். அவன் கண்கள் சிவந்து அனல் கக்கத் தயாராகிக் கொண்டிருந்தன.

“நீயெல்லாம் ஒரு பொண்ணா? உன்ன நெனைச்சாலே அசிங்கமா இருக்கு...? கத்தி ஆர்ப்பாட்டம் செய்கிறான் காதலன். அவனைச் சமாதானப்படுத்த  முடியாமல் விக்கித்து நிற்கிறாள் காதலி. இம்மாதிரியான இக்கட்டான நிலையில் “பிரன்க்” என்று சத்தமாய்க் கத்தும்போது ஒரு வெற்றிப் போதை வரும் பாருங்கள்! அதைத்தான் அணு அணுவாய் இரசிக்கக் காத்துக் கொண்டிருக்கிறான் குசும்பு குமார்.

“அந்தப் பொண்ணு உன்னோட காதலின்னா... அப்ப நான் யாரு?” கேள்வியோடு அறையும் சேர்ந்தே விழ,  குசும்பு குமார் சுருண்டு கீழே விழுகிறான் போதை தெளிந்தவனாய்.


ஆக்கம்,

உமாதேவி வீராசாமி,

பெந்தோங், பகாங்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

#குறுங்கதை 100 #நூறாவது நாள்

    எத்தனை எத்தனையோ போராட்டங்கள், சவால்கள், தடைகள். கடந்து வந்த மாயம் தெரியவில்லை. ஏடுகள் ஒவ்வொன்றாய்ப் புரட்டிப் பார்த்தான் வெற்றிமாறன். தொ...