செவ்வாய், 19 ஏப்ரல், 2022

#குறுங்கதை 072 #தலைவன்டா!

 

தன் மானசீக நடிகனின் ‘பீஸ்ட்’ திரைப்படத்திற்காக  என்.யூ. சென்டர் ஜீ.எஸ்.சியில் தன் நண்பனுக்கும் சேர்த்து இரண்டு டிக்கட்டுகளைப்  பதிவு செய்து விட்டதில் கதிருக்கு  அப்படியொரு மகிழ்ச்சி. படத்திற்கான அந்த மூன்று மணி நேர காத்திருப்புக்கூட அவனுக்குத் துன்பமாய் இருந்தது.

சரியாக இரண்டு மணிக்கெல்லாம் போப் கோர்ன் பெப்சியோடு திரையரங்கிற்குள்  தன் நண்பனோடு ஆஜாரானான் கதிர். திரையரங்கு நிறைந்திருந்தது. தன் தானைத் தலைவன் விஜயின் ஒவ்வொரு அசைவையும் இரசித்து இரசித்துப் பார்த்து விசில் அடித்தான். பக்கத்தில் அமர்ந்திருந்த பெண், கண்களை உருட்டிப் பார்ப்பதைப் பற்றி அவன் கொஞ்சமும் கவலைப்படவில்லை.

“தலைவா! தலைவா!”  கத்தி ஆர்ப்பாட்டம் செய்தான். கைகளைத் தட்டி குதூகலித்தான்.

அவனை அடக்கப் பார்த்துத் தோற்றுப் போனான் நண்பன்.  ஏறக்குறைய இரண்டரை மணி நேரம் விஜய் இரசிகர்களின் ஆர்ப்பாட்டத்தில் திரையரங்கே அதிர்ந்துதான் போனது.  தீவிரவாதிகளின் கையில் மாட்டிக்கொண்டவர்களை உயிரைப் பணையம் வைத்துக் காப்பாற்றிய விஜயை நினைத்து மெய் சிலிர்த்துப் போனான். படத்தின் இறுதி வரை தீவிர இரசிகனாய் உயிர்ப் பெற்றிருந்தான்  கதிர்.

ஹலமிதி ஹபிபொ ஹலமித்திமித்தி  வந்தாலே

ஹலமிதி ஹபிபொ

ஹலமித்திமித்தி வந்தா ஹலமிதி ஹபிபொ

ஹலமித்தி மித்தி வந்தாலே

ஹலமிதி ஹபிபொ ஹலமித்தி ஹபிபோ

பாடல் வரிகள் மனத்தில் ஒட்டிக்கொள்ள முணுமுணுத்துக் கொண்டே நண்பனோடு லிப்டில் ஏறிக் கொண்டான்.

“டேய் மச்சான்! விஜய் செம்ம மாஸ்டா. என்னா டான்ஸு... என்னா பைட்டு...  தலைவன்டா... வாழ்ந்தா தலைவன் மாதிரி ஊருக்கு நல்லது செஞ்சி வாழனும். அப்படி இல்லன்னா செத்துப் போயிடனும்!”  உணர்ச்சி பொங்கப் பேசினான்.

“ஆமாண்டா...!” கதிரின் பூரிப்புக்கு உரமேற்றி விட்டான் நண்பன்.  

சளைக்காமல் விஜயின் புராணத்தைச் பாடிக் கொண்டே குமரன்ஸ் சில்க்ஸைத் தாண்டிப் போனவர்களை அந்தக் குரல் தடுத்து நிறுத்தியது. சொல்லி வைத்தாற்போல இருவரும் ஒரே நேரத்தில் திரும்பிப் பார்த்தனர்.

“தம்பி... ரெண்டு வெள்ளி இருந்தா தரீங்களா... பசிக்குது!” பேசியவரைத் தலை முதல் கால் வரை நோட்டமிட்டான் கதிர். அழுக்குச் சட்டை. பரட்டைத் தலை. குளித்து நாளாகியிருக்க வேண்டும். முகத்தைச் சுளித்துக் கொண்டான்.  

பணப்பையைத் திறந்து பணத்தை எடுக்கப் போனான் நண்பன். தடுத்தான் கதிர்.

“இதெல்லாம் தண்ணீ கேசுடா. காசு கொடுத்தா உடனே தண்ணீ வாங்கிப் போட்டுட்டுத் தமழன் மானத்த வாங்குங்க! நினைச்சாலே வெக்கமா இருக்கு!” தலையில் அடித்துக் கொண்டான்.

மீண்டும் விஜயின் புராணம் தொடங்கியது. பெரியவரின் நினைவு மனத்தை நெருட,  திரும்பிப் பார்த்தான் நண்பன். பெரியவர் குப்பையோடு குப்பையாய் இருந்த உணவுப் பொட்டலத்தைப் பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

#குறுங்கதை 100 #நூறாவது நாள்

    எத்தனை எத்தனையோ போராட்டங்கள், சவால்கள், தடைகள். கடந்து வந்த மாயம் தெரியவில்லை. ஏடுகள் ஒவ்வொன்றாய்ப் புரட்டிப் பார்த்தான் வெற்றிமாறன். தொ...