ஞாயிறு, 24 ஏப்ரல், 2022

#குறுங்கதை 077 #மது

 

இரவு பத்து மணிக்குப் படுக்கைக்குச் சென்ற கற்பகத்தால் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை. படுக்கையில் படுத்த அடுத்த கணம் தன்னை மறந்து உறங்கிப் போகும் ரகம் கற்பகம். ஆனால், அன்று ஏனோ அது நடக்கவில்லை. வலுக்காட்டாயமாகக் கண்ணை மூடினாள். அடுத்த நொடி அறைக்கதவு தட்டப்படுவதை உணர்ந்தாள். மதுவைத் தவிர வேறு யாராகவும் இருக்கும். கதவைத் திறந்தாள். மது தலை குனிந்து நின்றுகொண்டிருந்தான்.

“என்னடா மது. இந்த நேரத்தில. உடம்பு சரியில்லையா?’ மதுவின் நெற்றியில் கை வைத்துக் காய்ச்சல் அடிக்கிறதா எனப் பார்த்தாள்.

அவன் தாடையைப் பிடித்து முகத்தை நிமிர்த்தினாள். முகம் வெற்றிலை போல் வாடியிருந்தது. கண்கள் வீங்கி சிவந்திருந்தன. மனம் பதறிப் போனது.

“ரொம்ப முடியலையா? சொல்லுடா! மருந்து தரட்டுமா?” குரலில் கனிவு பெருகியது.

“காய்ச்ச இல்ல. தலதான் கொஞ்சம் வலிக்குது. தூங்கனா சரியாயிடும்!” மீண்டும் அறைக்குள் புகுந்து கொண்டான்.

இனி யாருக்கும் அவன் தொல்லையாக இருக்க விரும்பவில்லை. திட்டமிட்டபடி இன்று வீட்டை விட்டு வெளியேறி விட வேண்டும். சரியாய் விடியற்காலை மணி 1.30. அம்மா தூங்கியிருப்பார் என்ற நம்பிக்கை வந்தவுடன் துணிப்பையோடு வரவேற்பறைக்கு வந்தான். முன் கதவைத் திறக்க சாவி வேண்டும். சாவி மாட்டும் ஆணியை வருடினான். சாவி இல்லை. மஞ்சள் விளக்கைத் தட்டிவிட்டுத் தேடுவதென முடிவு செய்தான். தட்டினான். சாவிக்குப் பதிலாக அவன் அம்மா கண்ணில் பட்டாள்.  மதுவுக்கு வியர்த்துக் கொட்டியது. அம்மாவைப் பார்த்தான். அம்மா அவனைப் பார்த்தாள். ஓடிச் சென்று அம்மாவைக் கட்டி அணைத்துக் கொண்டான். அருவியாய்க் கொட்டிய கண்ணீர் அவன் அம்மாவின் கன்னத்தையும் சேர்த்தே நனைத்தது.

“தொடாத டா!” அவனைத் தள்ளி விட்டாள் கற்பகம்.

“ம்மா...”

“நிறுத்துடா...!”

“ம்மா...”

“என்ன விட்டுட்டு போறதுக்கு உனக்கு எப்படிடா மனசு வந்துச்சு. கல் நெஞ்சுக்காரா!” பொங்கினாள் கற்பகம்.

“ம்மா...”

“அப்படி என்ன தீர்க்க முடியாத பிரச்சன உனக்கு? எதுவா இருந்தாலும் என் கிட்ட சொல்லியிருக்கலாம்ல”

“ம்மா.... நான் சொன்னா நீங்க செத்துப் போயிடுவீங்க! அம்மா காலில் அப்படியே சரிந்து விழுந்தான் மது.

அவனைத் தூக்கி நிறுத்தினாள் கற்பகம். அவன் கண்களை நேருக்கு நேர் பார்த்தாள்.

“உன்னால ஒரு பையனா வாழ முடியல. இதான உன் பிரச்சன?”

இதுநாள் வரை தான் சொல்லத் தவித்ததை, சொல்ல பயந்ததை இவ்வளவு இயல்பாய்த் தன் தாயால் எடுத்துக்கொள்ள முடியும் என்பதைக் கனவிலும்கூட நினைத்ததில்லை.

“உன் சந்தோசத்தவிட எனக்கு வேற ஏதும் பெரிசு இல்லடா மது.”

“ம்மா...  நான்...”

அவள் அவனை ஆரத்தழுவிக் கொண்டாள். உச்சி முகர்ந்தாள். அடுத்த நொடி அவனை விலக்கி விட்டுத் தன் அறைக்குச் சென்றாள். சில நிமிடங்களிலே திரும்பி வந்தாள். தன் கையில் இருந்த வங்கிக் கணக்குப் புத்தகத்தைக் காட்டினாள். முப்பதாயிரம் நிங்கிட் மதுவின் பெயரில் இருந்தது.

 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

#குறுங்கதை 100 #நூறாவது நாள்

    எத்தனை எத்தனையோ போராட்டங்கள், சவால்கள், தடைகள். கடந்து வந்த மாயம் தெரியவில்லை. ஏடுகள் ஒவ்வொன்றாய்ப் புரட்டிப் பார்த்தான் வெற்றிமாறன். தொ...