திங்கள், 25 ஏப்ரல், 2022

#குறுங்கதை 078 #பழிக்குப் பழி

 

டேய் மச்சான், எனக்கென்னமோ ரொம்ப பயமா இருக்குடா? இந்த நேரத்தில நாம இங்க வரது சரியாப் படல!” சொல்லிக்கொண்டே எச்சிலை விழுங்கினான் கரும்புலி கந்தன்.

“ஏய், நிறுத்துடா பயந்தாங்கொள்ளி, ஏன் இப்படி பயந்து சாகற!” கோபத்திலும் கிசுகிசுத்தான் பாலா.

தன் காதலை உதாசினப்படுத்திய அனிதாவை இன்று உண்டு இல்லை என்று செய்து விட முடிவெடுத்தான் பாலா. அதன் விளைவு இன்று பாலா கரும்புலி கந்தனுடன் அனித்தாவின் வீட்டின் கொல்லைப்புறத்தில் பூனை போல பதுங்கி உட்கார்ந்திருக்கிறான்..

“டேய் பாலா.. டேய்... எங்கடா இருக்க? எனக்கு இந்த இருட்ட பார்த்தா பயமா இருக்குடா. பக்கத்துல ஏதோ நிக்கிற மாதிரியே இருக்கு!,” பாலாவின் மௌனம் கரும்புலி கந்தனின் திகிலை அதிகரித்தது.

“ஸ்ஸ்ஸ்...“ பாம்பாக இருக்குமோ என்று அரண்டு போனான் கரும்புலி.

“பாலா...! பாலா...! பேசுடா...”

“ஸ்ஸ்ஸ்...” மீண்டும் அதே சத்தம்.

சில்லுன்னு காற்று வேறு. காற்றோடு சேர்ந்து வந்தது மல்லிகையின் மணம். பயத்தின் உச்சத்தில் இருந்த கரும்புலிக்கு விட்டால் ஓடிவிட வேண்டும்போல் இருந்தது. பாலாவின் நண்பனானதற்கு இன்று முதல் முறையாக வருத்தப்பட்டான்.

திடீரென யாரோ தலையைத் தடவ, அலறத் தொடங்கியவனை வாயைப் பொத்தி அடக்கினான் பாலா.

“டேய் மச்சான்... யாரோ என் தலைய தடவுறாங்கடா. பயமா இருக்குடா...வாடா போயிடலாம்,” காலில் விழாத குறையாய்க் கெஞ்சினான் கரும்புலி.

“ஸ்ஸ்ஸ்... வாய மூடு. சத்தம் போடாத. இன்னொரு முறை சத்தம் வந்துச்சு.. செத்த...,” பல்லைக் கடித்தான் பாலா.

“உன்ன விட மாட்டேன். இன்னிக்கு வசமா மாட்டின, உன்னை வச்சு செய்யப் போறேன்,” மனதிற்குள் பேசுவதாக நினைத்துச் சத்தமாகவே பேசினான்.

“என்னடா பேசுற...? யாருகிட்ட பேசற?” குழப்பமும் பயமும் ஒரு சேர கேட்ட கரும்புலிக்குத் தகுந்த பதில் வரவில்லை.

“கரும்புலி...! கரும்புலி...! வந்துட்டியா. ஹா...ஹா...ஹா... வாடா உனக்காகத்தான் காத்திருக்கிறேன். வாடா... வா...,” முந்தைய நாள் தூக்குப்போட்டுச் செத்துப் போன பொன்னம்மா அக்காள் குரல் போலவே இருக்க, போட்டிருந்த காற்சட்டை ஈரமாவதை அவனால் தடுக்க முடியவில்லை. அந்தக் குளிரிலும் கரும்புலிக்கு வியர்த்துக் கொட்டியது.

“டேய் மச்..சான்... என்னால இதுக்..கு மேல கொஞ்ச நேரங்கூட இங்க இருக்...க முடியாது. பயத்துல நெஞ்செல்லாம் அடைக்கு..து,” கரும்புலியின் குரல் சிக்கி சிக்கி  வந்தது.

நினைத்தது போலவே அனித்தா பின் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தாள்.

“டேய்... பயப்படறத நிப்பாட்டு. நான் இப்ப அந்தத் திமிர் பிடிச்சவளைக் கட்டிப்பிடிச்சி  முத்தம் கொடுப்பேன். நீ வீடியோ எடு புலி. என் முகம் மட்டும் தெரியக்கூடாது!” பக்குவமாய் நினைவுறுத்தினான் பாலா.

பதுங்கிய இடத்திலிருந்து எழுந்தான். அனித்தாவை நெருங்கினான்; முரட்டுத்தனமாய்க் கட்டிப் பிடித்தான். முத்தம் கொடுத்தான். அவன்  நினைத்தது போல் அவள் திமிரவில்லை. வாயெல்லாம் பிசுபிசுத்தது. அவள் முகத்தைப் பார்த்தான். வார்த்தைகள் தொண்டைக்குழியில் சிக்கிக் கொண்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

#குறுங்கதை 100 #நூறாவது நாள்

    எத்தனை எத்தனையோ போராட்டங்கள், சவால்கள், தடைகள். கடந்து வந்த மாயம் தெரியவில்லை. ஏடுகள் ஒவ்வொன்றாய்ப் புரட்டிப் பார்த்தான் வெற்றிமாறன். தொ...