வியாழன், 5 மே, 2022

#குறுங்கதை 088 #உலக மகா நடிப்புடா சாமி!

 

 

“டேய் மச்சான்! அவன் என்னடா,  நம்மள பாக்காத மாதிரியே போறான்!” அலுத்துக் கொண்டான் சரத் என்கிற சரத்குமார். 

“விடுடா, அவன பத்தி உனக்குத் தெரியாதா! காரியம் நடக்கனும்னா கால பிடிப்பான். இல்லன்னா கழுத்த நெறிப்பான்!” சமாதானப்படுத்த முயன்றான் கதிர்.

“அதுக்கு இல்லடா, நேத்துகூட அவசரமா இருநூறு வெள்ளி வேணும்னு போன் அடிச்சி தொல்ல பண்ணான்டா! நானும் பாவம்னு கொடுத்தேன். இன்னைக்கு என்னடான்னா... நன்றி கெட்டவன்! தெரியாத மாதிரி நடந்துக்கிறான்!“

“சரி, அவனப் பத்தி பேசினா டென்ஷன்தான் ஆகும். வா, போயி பேங்க்ல காச எடுத்திட்டுக் கிளம்புவோம்!” சரத்தின் கவனத்தைத் திசை திருப்பப் பார்த்தான் கதிர். ஆனால், மிஞ்சியது என்னமோ தோல்விதான்.

“கொஞ்சம் இங்கயே நில்லுடா. அவன்கிட்ட என்னன்னு கேட்டிட்டு வந்திடுறேன்!” பதில் மொழிக்காகக் காத்திருக்க அவனுக்குப் பொறுமையில்லை.

கவுண்டரில் மும்முரமாய்ப் பேசிக்கொண்டிருந்தவனை முதுகுப் புறத்தில் தட்டினான். அவன் பயந்திருக்க வேண்டும். திரும்பி மிரட்சியுடன் பார்த்தான்.

“என்னடா சேகர். பாத்துக் பாக்காத மாதிரியே போற!” சேகரின் அதிர்ச்சியை அணுஅணுவாய் இரசித்தான் சரத்.

“ஏய்... சரத். எப்படா வந்த? சோரிடா, முக்கியமான வேலையில உன்ன கவனிக்கவே இல்ல!” அவன் வார்த்தைகளில் வருத்தம் இழையோடியது.

“எப்படிடா உன்னால மட்டும் இப்படியெல்லாம் நடிக்க முடியுது. உலக மகா நடிப்புடா சாமி! ஒஸ்காரே கொடுக்கலாம்டா?”

“இல்லடா சரத். சத்தியமா நான் பாக்கல! பாத்திருந்தா பேசியிருக்க மாட்டனா!”

“டேய், போதும்டா. இனிமே உன்ன நம்பறதா இல்ல!” வார்த்தையில் இருந்த வெறுப்பு முகத்திலும் தெரிந்தது.

சேகரின் முகம் வாட்டம் கண்டது.

“சத்தியமா சொல்றேன்,  நம்புடா!”

“உங்க அம்மா மேல சத்தியம் பண்ணுடா, நம்பறேன்” நண்பனை வார்த்தையால் மடக்கி விட்டதில் சரத்துக்கு உள்ளூற மகிழ்ச்சி பொங்கியது.

“சோரிடா, அது மட்டும் முடியாது!”

“நீ பண்ணமாட்டேன்னு எனக்கு நல்லா தெரியும்டா”

“இல்லடா சரத். செத்தவங்கங்கள ஏன் கஷ்டப்படுத்தனும்!” குரல் உடைந்து அழுகை பெரிதாய் வெளிப்பட்டது.

“என்னடா சொல்றே!”

“நேத்து ஹார்ட் எத்தேக் வந்து எங்கம்மா துடிச்சுப் போயிட்டாங்கடா சரத். கிளினிக் கூட்டிட்டுப் போகத்தான் உன்கிட்ட காசு கேட்டேன்”

“டேய், என்னடா, என்னன்னமோ சொல்ற?” ஆணவம் இருந்த இடத்தில் அதிர்ச்சி குடி கொண்டது.

“இப்ப அம்மா எப்படி இருக்காங்க?” சரத்தின் கேள்வி முடியும் முன்பே சேகரின் அழுகை மேலும் பெரிதானது.

“அவங்க என்ன அனாதையா  விட்டுட்டுப் போயிட்டாங்கடா! கடைசி காரியம் பண்ண காசு பத்தல. அதான், எக்கவுண்டல ஏதாவது இருக்குமான்னு பாக்க வந்தேன்! சத்தியா நான் நடிக்கலடா!” ஓவெனக் கதறியவனைக் கட்டி அணைத்துக் கொண்டான் சரத்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

#குறுங்கதை 100 #நூறாவது நாள்

    எத்தனை எத்தனையோ போராட்டங்கள், சவால்கள், தடைகள். கடந்து வந்த மாயம் தெரியவில்லை. ஏடுகள் ஒவ்வொன்றாய்ப் புரட்டிப் பார்த்தான் வெற்றிமாறன். தொ...