மூச்சு
முட்டச் செய்யும் பெட்டிக்குள் இருப்பது எத்துணைத் துன்பம் என்பது அனுபவித்தவர்களுக்குத்தான்
தெரியும். எனக்கும் இன்றுதான் தெரிகிறது. என்னைச் சுற்றி உறவுகள் கண்ணீரைச்
சிந்துவதும் மூக்கைச் சிந்துவதும் சங்கடமாய்த்தான் இருக்கிறது. பெரியசாமி பெரியப்பாவின்
குரல் வீட்டை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. இரண்டு வாரங்களாய் லொக் லொக்கென்று இரும்மிக்
கொண்டிருந்தவர் இன்று துருதுருவெனக் இயங்கிக் கொண்டிருப்பது ஆச்சரியத்தைத் தருகிறது.
“பெரியப்பா,
நீங்கதான் ஏதாவது பண்ணனும். ப்லீஸ் பெரியப்பா!” துக்கத்தை அடக்க முடியாமல் கதறுகிறாள்
சத்தியா.
“நீ
கவலப்படாதடா செல்லம். பெரியப்பா இருக்கேன்!” பெரியப்பாவின் ஆறுதல் வார்த்தைகள் இதமாய்
ஒலிக்கின்றன.
நானில்லாத
வாழ்க்கையைச் சத்தியாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்ற உண்மையை உணரும்போது உள்ளத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடுகிறது. ஆனால், அவள்
அழுகை துன்பத்தை அல்லவா தருகிறது. என்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவனை நினைத்தாலே கோபம்
கோபமாய் வருகிறது.
“பஞ்சு!
எங்கடா இருக்கே!” சத்தியாவின் குரல் என்னைப் பலவீனப்படுத்துகிறது.
“ஹலோ!
நான் இங்கதான் இருக்கேன். பத்தடி பின்னால வந்து பாத்தா எல்லாப் பிரச்சனையும்
தீர்ந்திடும் சத்தியா! ”
புரியாதவர்களிடத்தில்
என்ன பேசி என்ன பயன்? மனம் நொந்து கொள்கிறது. நேரமாக ஆக அழுகைச் சத்தம் குறையத்
தொடங்குகிறது. இவ்வளவுதானா வாழ்க்கை
என்றிருந்தது. பிரிவுகளை ஏற்றுக்கொள்ள மனிதன் எவ்வளவு சீக்கிரம் பழகிக்
கொள்கிறான்! நினைக்க நினைக்க எனக்கு வியப்பாக இருக்கிறது.
“சரி
இப்படியே இருந்தா எப்படி? எல்லாத்தையும் நான் பாத்துக்கிறேன். போயி எல்லாம் நடக்க
வேண்டியத பாருங்க!” பெரியப்பாவின் தோரணை எனக்கே நம்பிக்கையூட்டுவதாய் இருந்தது. அவரவர்
வேலையைப் பார்க்கத் தொடங்கி விட்டார்கள் போலும். அழுகைச் சத்தம் போன இடம் தெரியவில்லை.
இனியும்
இப்படியே இருந்தால் என்னை இந்தக் குடும்பமே மறந்துவிடும் என்ற பயம் தொற்றிக் கொள்கிறது.
பெட்டியை உதைக்கிறேன். தலையால் மோதிப் பார்க்கிறேன். முடியவில்லை. இப்படியே மூச்சு
முட்டிச் செத்து விட்டால், சத்தியாவின் நிலை?
என்
வாழ்க்கையை நாசப்படுத்தியவன் மனது வைத்தாலொழிய என்னை யாராலும் காப்பாற்ற முடியாது.
என் இறகுகளைப் பிடித்து இந்தப் பெட்டிக்குள் போட்டவனுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன்.
அவன் வருவானா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக