சனி, 7 மே, 2022

#குறுங்கதை 090 #அம்மாவின் நாசி லெமாக்

 


“ம்மா... பிள்ளைங்க எல்லாம் நாசி லெமாக் சாப்பிடனும்னு ஆசப்படுறாங்க. எப்படிம்மா? காலையில செய்ய முடியுமா?” மகனின் ஆசை, வார்த்தைகளில் மட்டுமல்ல கண்களிலும் தெரிந்தது.

“செஞ்சிடலாம் ஐயா!’

“ம்மா! நாளைக்கு ரொம்ப ஜேம்மா இருக்கும். காலையில எட்டு மணிக்கெல்லாம் கெளம்பினாதான் சரியா இருக்கும். நீங்க எத்தனை மணிக்கு எழுந்து செய்வீங்க? கஷ்டமா இருந்தா பரவாலம்மா!” மகனின் கவலை புரிந்தது.

“கவலப்படாத ஐயா. அம்மா செஞ்சிடுவேன்!”

முதல் நாள் இரவே மிளகாய்ச்சாந்து தயாராகி விட்டது. காலையில் அரைத்துப் பிள்ளைகளின் தூக்கத்தைக் கெடுக்க விரும்பவில்லை கனிமொழி. சம்பாலுக்கான வெங்காயங்களைத் தோல் உரித்து குளிர்சாதனப்பெட்டியில் வைத்துக் கொண்டாள். கணவன் எத்தனையோ முறை படுக்கச் சொல்லி வற்புறுத்தியும் அவள் கேட்டபாடில்லை. நிலக்கடலையைப் பொரித்துப் போத்தலில் போட்டு வைத்து விட்டாள். வெள்ளரிக்காய் வெட்டுவது பெரிய வேலையில்லை. காலையில் பார்த்துக்கொள்ளலாம். முட்டையைப் பத்து நிமிடங்களில் அவித்துத் தோல் நீக்கி விடலாம். எல்லாவற்றையும் ஒரு முறை சரிபார்த்துக் கொண்டாள்.

இரவெல்லாம் மகன் கேட்ட நாசி லேமாக் அவளைத் தூங்க விடாமல் செய்தது. எத்தனையோ மாதங்களுக்குப் பிறகு குடும்பத்தோடு வந்திருக்கிறான். அவனுக்கு விருப்பமானதைச் செய்து கொடுத்து அசத்திவிட வேண்டும். கனிமொழியின் மனம் தீர்க்கமாய் முடிவெடுத்தது.

விடியற்காலை நான்கு மணிக்கெல்லாம் தூக்கம் விடைபெற்றுக்கொள்ள எழுந்து உட்கார்ந்துகொண்டாள்.

“கனி! பேசாம படுக்கிறீயா! இத்தனை காலையில எழுந்து என்ன பண்ணப் போற? பிள்ளைங்க தூங்குதுங்க! சட்டி பானைய உருட்டி எழுப்பிடாத!” தூக்கக் கலக்கத்திலும் தெளிவாய்ப் பேசினான் கணவன்.

ஒரு அடுப்பில் முட்டை, மற்றொரு அடுப்பில் சம்பால், கூக்கரில் சோறு. நாசி லேமாக் செய்யும் வேலையில் மூழ்கிப்போனாள் கனிமொழி.  மணக்க மணக்க நாசிலேமாக் சுவையான சம்பாலோடு தயாரானது. இவள் வேலையை முடிப்பதற்கும் மகன் எழுந்து வெளியே வருவதற்கும் சரியாக இருந்தது.

“ஏம்மா! எட்டு மணிக்கெல்லாம் கெளம்பனும்னு சொன்னேன். ஏன் எழுப்பி விடல?” முகத்தைச் சுளித்தான் மகன். அடுத்த சில நிமிடங்கள் வீடே அல்லோலங்கலப்பட்டுப் போனது. அரை மணி நேரத்திற்குள் மகன் குடும்பம் விடைபெறத் தயாரானது.

“ஐயா, நாசி லெமாக் சாப்பிடாமயே போறீங்களே!” கனிமொழி குரலில் ஏமாற்றம் தெரிந்தது.

“பரவாலம்மா... மணி ஆச்சி கிளம்பறோம்!”

மனமில்லாமல் கையசைத்து வழியனுப்பினாள். சோபாவில் அமர்ந்திருந்த கணவன் மேல் சாய்ந்துகொண்டாள். இமைகள் கனத்து மூடிக் கொண்டன. கண்ணீர், கணவனின் தோள்பட்டையை நனைத்தது.

“பாட்டி... கதவ திறங்க. எங்களுக்குப் பசிக்குது... நாசி லெமாக் வேணும்!” கதவைத் தட்டி ஆர்ப்பாட்டம் செய்த பேரப்பிள்ளைகளை ஓடிச் சென்று கட்டி அணைத்துக்கொண்டாள் கனிமொழி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

#குறுங்கதை 100 #நூறாவது நாள்

    எத்தனை எத்தனையோ போராட்டங்கள், சவால்கள், தடைகள். கடந்து வந்த மாயம் தெரியவில்லை. ஏடுகள் ஒவ்வொன்றாய்ப் புரட்டிப் பார்த்தான் வெற்றிமாறன். தொ...