காலை எழுந்தவுடன் நினைத்தது போலவே மகள் ஜானு அணிச்சலோடு வரவேற்பறையில் தயாராக இருக்க, மாடியிலிருந்து இறங்கி வருகிறாள் மஞ்சு. அவள் கடைசிப் படியில் காலடி எடுத்து வைக்கும்போது அம்மா பாடல் ஒலியேற மகள் கைகளைப் பிடித்து அவளை வரவேற்பறை நடுவில் கொண்டு வந்து நிறுத்துகிறாள். மலர் மழை பொழிகிறது. மஞ்சு அணிச்சலை வெட்ட கத்தி ஆரவாரம் செய்கிறாள் ஜானு. சத்தம் தாங்காமல் காதுகளைப் பொத்தி கண்களை இறுக மூடுகிறாள் மஞ்சு.
மீண்டும்
கண்களைத் திறந்து பார்க்கிறாள். வரவேற்பறையில் ஜானு இல்லை. அணிச்சல் இல்லை. அம்மா பாடல்
இல்லை. இருள் மட்டுமே சூழ்ந்திருந்தது. அந்த இருட்டு அவளுக்குள் பயத்தை உண்டு பண்ணியது.
அவசரமாய்ச் சென்று கதவுகளைத் திறந்து விட்டாள். மூச்சை நீளமாய் இழுத்து விட்டாள்.
“ம்மா
உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்!” அன்னையர் தினத்திற்கு முதல் மகள் சொன்னபோது விபரீதம் புரியாமல்
தலையை ஆட்டிக் கொண்டாள் மஞ்சு.
“ம்மா...
நான் ஒருத்தர காதல் பண்றேன். அவர கல்யாணம் பண்ணிக்கலாம்னு நெனைக்கிறேன் நீங்க என்ன
சொல்றீங்க!” தலைமேல் பெரும் பாரத்தைத் தூக்கி வைத்துவிட்டுச் சுவரோரம் சாய்ந்து கொண்டாள்
ஜானு.
“ஜானு,
என்ன பேசற! காதல் கத்திரிக்கான்னு. தனியாளா உன்ன வளக்க என்ன பாடு பட்டிருப்பேன். உனக்குத்
தெரியாதா என்ன?” மஞ்சுவின் குரல் உயர்ந்தது.
“எனக்குப்
பிடிச்சிருக்கும்மா. அவ்வளவுதான்!” குரலின் அழுத்தம் மஞ்சுவை நடுங்கச் செய்தது.
“முடியாது
ஜானு! இந்த வீட்டில காதலுக்கு இடம் இல்ல. உங்கப்பாவ காதல் பண்ணி நான் ஏமாந்தது போதும்.
எல்லாத்தையும் மறந்திட்டு ஒழுங்கா இரு!” எச்சரித்தாள் மஞ்சு.
“சரிம்மா.
இனி பேசி புண்ணியம் இல்ல. நான் கிளம்பறேன்!” மகள் நினைத்தைச் சாதித்துக் கொண்டாள்.
“ஒரு
அம்மாவோட மனசு புரியாம நீ நடந்துக்கிறது சரியில்ல ஜானு! உன்ன பொத்திப் பொத்தி வளத்தேன்
ஜானு. மறந்திடாத! என்ன அனாதையா விட்டுட்டுப் போகாத! பிளீஸ்!” மஞ்சுவின் கதறல் அவள்
இரும்பு மனதைக் கரைக்கவில்லை. மஞ்சு அவள் மகிழ்ச்சியைத் தொலைத்து இன்றோடு ஓராண்டாகி
விட்டது. மானம் இழந்து மரியாதை இழந்து உறவுகளின் கேலிக்கு ஆளாகி படாதபாடு விட்டாள்.
வீட்டு
வாசல்மணி அடிக்கிறது. கண்களைத் துடைத்துக் கொண்டாள் மஞ்சு. கதவைத் திறந்தாள். குடும்பம்
தலை குனிய காரணமானவள் தலை கவிழ்ந்து நின்று கொண்டிருந்தாள்.
“ஒரு
குழந்தைக்கு அம்மாவா, உங்க மனச புரிஞ்சிகிட்டு வந்திருக்கேன்மா. என்ன(னை) மன்னிக்க
மாட்டீங்களா?"
அடுத்த
கணம் மஞ்சுவின் அணைப்பில் ஜானு. ஜானுவின் அணைப்பில் அவள் குழந்தை. அதற்கு மேல் வார்த்தைகளுக்கு
இடமில்லாமல் போனது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக