வியாழன், 12 மே, 2022

#குறுங்கதை 095 #செல்லமே செல்லம்...

 


“தாத்தாவுக்கு ரொம்ப முடியலையாம்! சீக்கிரம் கிளம்பு!” அவசரப்படுத்திய அம்மாவைக் கூர்ந்து பார்த்தேன். முகத்தில் கலவரம் தெரிந்தது. கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு நின்றது.

“ம்மா... நாளைக்குப் போலாமா? ஸ்கூல் பாடம் இருக்கு!” சொல்லிக்கொண்டே என் அறைக்குள் நுழைந்து கொண்டேன்.

“என்னடா பேசற? தாத்தாவுக்கு முடியலன்னு சொல்றேன், நீ என்னடான்னா காரணம் சொல்ற!” அறைக்கதவிற்கிடையே தலையை விட்டுக் கோபமாய் எட்டிப் பார்த்தார் அம்மா. முதன்முறையாய் என்னைக் கோபித்துக் கொண்ட அம்மாவை ஆச்சரியமாய்ப் பார்த்தேன்.

தாத்தாவின் செல்லமகள்தான் அம்மா.  பாட்டியின் முகம் பார்த்ததில்லையாம். செல்லமாக வளர்ந்ததை அம்மா பெருமையாய்ப் பேசிய தருணங்கள் பல. அப்படிப் பேசும்போதெல்லாம் அப்பா ஓரக்கண்ணால் சாடை காட்டத் தொடங்கி விடுவார். முகத்தைக் கோணலாக்கி அப்பா செய்யும் சேட்டைகள் இரசிக்கும்படியாக இருக்கும். அப்பாவின் கோணல் முகத்தைப் பார்த்துச் சத்தமாய்ச் சிரித்து அப்பாவைப் பலமுறை  காட்டிக் கொடுத்திருக்கிறேன். அப்பாவுக்கு அர்ச்சனைகள் ஆரம்பித்து விடும். நல்ல பிள்ளையாய் அறைக்குள் புகுந்து கொள்வேன்.

“என்ன(னை)ப் பாத்தா உங்க ரெண்டு பேருக்கும் கிண்டலாக இருக்குல!” குழந்தைபோல அழத்தொடங்கும் அம்மாவைச் சமாதானப்படுத்த அப்பா எத்தனையோ முறை போராடியிருக்கிறார். பலமுறை தோற்றுப் போயிருக்கிறார். என் ஒரு முத்தம் மட்டுமே அதற்கான அருமருந்து என வளர வளரத் தெரிந்துகொண்டேன்.

“சீக்கிரம் கிளம்புடா! அப்பா வர வரைக்கும் காத்திருக்க முடியாது!” மெத்தை மேல் மல்லாக்காய்ப் படுத்திருந்த என்னை அவசரமாய்த் தட்டி எழுப்பிய அம்மாவைக் கோபித்துக்கொள்ள மனம் வரவில்லை. ஆனால், வர முடியாது என்பதை எப்படிச் சொல்வது? பாடங்களை இன்றே செய்து அனுப்பியாக வேண்டும். இல்லையென்றால் வார்த்தையால் வறுத்தெடுத்து விடுவார் கணித ஆசிரியர்.

மெத்தையில் எழுந்து உட்கார்ந்துகொண்டேன். புத்தகங்களைப் பரப்பி வைத்தேன். முதலில் கணிதப் பாடம். மற்றதைப் பிறகு செய்துகொள்ளலமென முடிவெடுத்தேன். இடையிடையே அம்மாவின் குரல் கேட்காமல் ஏதோ போல இருக்க கூப்பிட்டுப் பார்த்தேன் பதிலில்லை. வீடெல்லாம் தேடினேன். காணவில்லை.

“ம்மா...! எங்கம்மா போனீங்க!” உதடுகள் துடித்தன. காரணமே இல்லாமல் கைகள் நடுங்கின. பயம் தொற்றிக் கொண்டது. மீண்டும் படுக்கையறை ஒவ்வொன்றாய்ச் சென்று பார்த்தேன். இல்லை.  சமையலறையிலும் இல்லை. குளியலறையில் ஏதும் மயங்கி விழுந்திருப்பாரோ! மூளை விபரீதமாய் யோசிக்க ஆரம்பித்தது. அப்படியேதும் இல்லை என்றபோது பிள்ளையாருக்கு ஆத்மார்த்தமாய் நன்றி சொல்லிக்கொண்டேன்.

“நான் ரெடியாயிட்டேன். சீக்கிரம் கிளம்புடா” சொல்லிக்கொண்டே பூசையறையிலிருந்து வந்த அம்மாவைப் பார்த்ததும் மனம் லேசானது. படபடப்புத் தானாய் அடங்கியது. ஒரு வார்த்தையும் சொல்லாமல் டீ-சர்ட் ஒன்றை மாட்டிக்கொண்டு கிளம்பினேன். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

#குறுங்கதை 100 #நூறாவது நாள்

    எத்தனை எத்தனையோ போராட்டங்கள், சவால்கள், தடைகள். கடந்து வந்த மாயம் தெரியவில்லை. ஏடுகள் ஒவ்வொன்றாய்ப் புரட்டிப் பார்த்தான் வெற்றிமாறன். தொ...