சனி, 14 மே, 2022

#குறுங்கதை 097 #போகாதே!

 


நிமிடத்திற்கு நிமிடம் காரின் வேகம் அதிகரித்துக் கொண்டே போகிறது. பின்னால் அமர்ந்திருக்கும் என்னுடைய பயம் அவளுக்குப் புரியவில்லை. அவள் தோள்பட்டையைப் பிடித்து அழுத்துகிறேன். அவள் அதைப் பொருட்படுத்தவில்லை. மூச்சுத் திணறுகிறது. கண்ணாடியைத் திறந்து விடுகிறேன். விரித்துவிடப்பட்ட முடி கட்டுப்பாடின்றி பறக்கிறது. கையால் இழுத்துப் பிடித்துக் கொள்கிறேன். காற்று முகத்தில் வேகமாய் அடித்துச் செல்ல மூச்சுத் திணறல் அதிகமாகிறது. சட்டெனக் கண்ணாடியைச் சாத்துகிறேன்.

“ஏய்! உனக்குப் பைத்தியமா? இப்படியே போனா செத்திடுவோம்!” கத்துகிறேன். வேகத்தை மேலும் அதிகரிக்கிறாள். சாலையில் வாகனங்கள் அதிகமில்லாதது நல்லதாய்ப் போயிற்று.

“காடிய நிறுத்து! இல்ல...” அலறுகிறேன். சத்தமாய்ச் சிரிக்கிறாள்.

வேகம் நூற்று நாற்பதைத் தொட உடம்பெல்லாம் உதறத் தொடங்குகிறது.

“நான் சாக விரும்பல. தயவு செஞ்சி காடிய நிப்பாட்டு!” அவளிடம் உயிர்ப்பிச்சை கேட்கிறேன். அவள் தர மறுக்கிறாள்.

என் உறவுகளின் முகங்கள் ஒவ்வொன்றாய் கண்முன்னே மின்னல் வேகத்தில் வந்து செல்கின்றன. கண்களை இறுக மூடிக்கொள்கிறேன். நான் இறந்துவிட்டால் இவர்கள் நிலை? நினைத்துப் பார்க்கத் தைரியம் இல்லை.  நெஞ்சு படபடக்கிறது. தடவிவிட்டுக் கொள்கிறேன்.

“சொல்றத கேளு, ப்லீஸ்!” அவளைப் பலமாய் உலுக்குகிறேன். அவளின் சிரிப்புச் சத்தம் அதிகமாகிறது.

வேகம் நூற்றைம்பதை நெருங்குகிறது. அவள் இருக்கையை இரு கைகளால் இறுக்கமாய்ப் பிடித்துக் கொள்கிறேன். கைநடுக்கத்தைத் தடுக்க முடியவில்லை. இனியும் முடியாது. பயத்தில் அவள் கைகளைப் பிடித்து இழுக்கிறேன். கார் அசூர வேகத்தில் பறக்கிறது. அவள் பயங்கர சிரிப்பு என்னைப் அச்சுறுத்துகிறது.

அடுத்து நடக்கவிருப்பதை ஊகிப்பதற்குள் பேரிடி சத்தத்தோடு கார் எதையோ மோதி நிற்கிறது. அதிர்ச்சியில் கண்களை மூடிக்கொள்கிறேன். சில நொடிகளில் மெதுவாய்க் கண்களைத் திறக்கிறேன்.

அவள் உடல் ஸ்டேரிங்கில் சாய்ந்து கிடக்கிறது. தலையில் தொடங்கி உடலெல்லாம் இரத்தம். என் பார்வை மங்குகிறது. குமட்டிக்கொண்டு வருகிறது. தலையைப் பிடித்துக் கொள்கிறேன்.

“யாராவது இருங்கீங்களா! ப்லீஸ், வாங்களேன்!” அலறிக் கொண்டே வெகுதூரம் உதவி தேடி ஓடுகிறேன். யாரும் கண்ணில் தென்படவில்லை.

அவளைக் காப்பாற்ற வேண்டும். மனம் துடிக்கிறது. மீண்டும் அவளை நோக்கி ஓடி வருகிறேன்.  

“சொன்னனே கேட்டியா! அநியாயமா செத்துப் போயிட்டீயே!” அவள் முகத்தைத் தொட்டுத் திருப்புகிறேன். அவள் முகத்தில் என்னைக் காண்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

#குறுங்கதை 100 #நூறாவது நாள்

    எத்தனை எத்தனையோ போராட்டங்கள், சவால்கள், தடைகள். கடந்து வந்த மாயம் தெரியவில்லை. ஏடுகள் ஒவ்வொன்றாய்ப் புரட்டிப் பார்த்தான் வெற்றிமாறன். தொ...