திங்கள், 28 பிப்ரவரி, 2022

#குறுங்கதை 023 #கனவு பலிக்குமா?

 


காலை எட்டு மணிக்கெல்லாம் வகுப்பு தொடங்கிவிடும். முதல் ஆளாக விரிவுரையாளர் வகுப்பில் ஆஜராகி விடுவார். முதலில் சிற்றுண்டி எடுக்க வேண்டும். பின்னர் வகுப்புக்குச் செல்ல வேண்டும். இல்லையென்றால் பசியில் வாட வேண்டியதுதான். உடம்பு தாங்காது. 

 

அவசரமாய் வகுப்பிற்குக் கிளம்பிக்கொண்டிருந்த எனக்குக் கோகிலாவின் புலனச்செய்தி கவனத்தை ஈர்க்க, அப்படியே உட்கார்ந்து கொண்டேன். அதுவும் எங்களின் இளையோர் எழுத்தாளர் குழுமத்தில் இச்செய்தி வந்திருந்ததால் ஆர்வம் மேலோங்கியது. அவசரத்திலும் அச்செய்தியைப் படிக்கத் தோன்றியது

 

வணக்கம். காலையில கனவு கண்டா பலிக்குமா?”

 

கிண்டலாய் ஒரு கேள்வி.

 

அப்படித்தான் சொல்லிக்கிறாங்க!” நானும் கிண்டலாய்ப் பதில் அனுப்பினேன். 

 

நம்ப தோழர் தில்லைநாதன் கனவுல வந்தாரு. நம்பவே முடியல!” 

 

அப்படின்னா முக்கியமான கனவாத்தான் இருக்கனும். சொல்லுங்க நாங்களும் தெரிஞ்சிக்கிறோம்!ஆர்வமுடன் கேட்டேன். 

 

நாதன் தொடர்ந்து நிறைய கத எழுதற மாதிரியும், அவர சுத்தி இரசிகர் கூட்டம் குழுமி இருக்கிற மாதிரியும் கனவுல வந்திச்சி!சிரிப்பு ஈமோஜியோடு வந்தன கோகிலாவின் வார்த்தைகள். இடையிடையே மற்றவர்களும் இணைந்துகொள்ள கிண்டல் பேச்சுக்கும் நையாண்டிக்கும அளவில்லாமல் போனது தில்லைநாதன் அன்றைய பேச்சுப் பொருளாகிப் போனான்.

 

அந்தக் கலகலப்பில் என்னைத் தொடர்ந்து கலந்துகொள்ள விடாமல் ஏதோ ஒன்று என்  ஆழ்மனத்தைப் பிசையத் தொடங்கியதுகோகிலாவின் வார்த்தைகளில் கிண்டலைவிட எதிர்பபார்ப்பும் ஏக்கமும் இருப்பதாய் உணரத் தொடங்கினேன். ஓராண்டிற்கு முன் சிறுகதை மீது ஆர்வம் கொண்ட இளையோருக்காகக் கோகிலாவின் தலைமையில் உருவாக்கப்பட்டதுதான் இந்தப் புலனக் குழுமம். இந்த ஓர் ஆண்டில் எத்தனை எத்தனை பயிலரங்குகள், கலந்துரையாடல்கள். உள்நாட்டு எழுத்தாளர்களோடு சந்திப்புகள். எத்தனை விதமான முன்னெடுப்புகள். நினைத்துப் பார்க்கும்போதே பிரமிப்பாய்த்தான் இருக்கிறது.

.   

செய்தியைப் படித்து விட்டு பதிலேதும் சொல்லாத தில்லைநாதன் மீது வருத்தம் தோன்றியது. அலைபேசியை எடுத்தேன் 

 

ன்டா... குழுவில என்னன்னமோ நடக்குது. நீ என்னடான்னா ஒன்னுமே சொல்லாம ஒதுங்கியே நிக்கிற!குரலை உயர்த்தினேன். 

 

இல்லடா... விடிய விடிய கண்ணு முழிச்சி இப்பத்தான்  என்னோட சிறுகத தொகுப்புக்காகப் பத்தாவது கதைய எழுதி முடிச்சேன். அதான்...”

 

“காலையில கனவு கண்டா நிச்சயம் பலிக்கும்”  நம்பிக்கையாய் ஒரு குறுஞ்செய்தியைக் குழுவில்  அனுப்பிவிட்டு  உற்சாகமாய் வகுப்புக்குக் கிளம்பினேன்.

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2022

#குறுங்கதை 022 #நன்றி

 

 

நேற்றிலிருந்தே பாஞ்சாலிக்கு நிலைகொள்ளவில்லை. நல்லவர் போல நாடகமாடிய  முதலாளி அம்மாவின்  பேச்சைக் காதுபட கேட்டதிலிருந்து அவர் மேல் இருந்த அன்பு, நம்பிக்கை எல்லாம் தூள் தூளாகிப் போனது. ஐந்து வருடங்களாகச் சொந்த குடும்பமாக நினைத்து மகிழ்ந்ததெல்லாம் அர்த்தமில்லாமல் போனதாய் உணர்ந்தாள்.

காலை ஆறு மணிக்கெல்லாம் எழுந்து இரவு வரைக்கும் மாடாய் உழைத்திருக்கிறாள்.  அம்மா, அப்பா பிள்ளைகள் என ஒருவர் விடாமல் அனைவருக்கும் சேவகம் செய்திருக்கிறாள். இது நாள் வரை கணக்குப் பார்த்து வேலை செய்ததாய் அவளுக்கு ஞாபகமில்லை. ஞாயிற்றுக்கிழமை ஓய்வு நாளாக இருந்தாலும்கூட முதலாளி அம்மாவிற்குத் துணையாக இருந்திருக்கிறாள். முதலாளி அம்மாவைத் தன் தாயாக நினைத்திருக்கிறாள். நடத்தியிருக்கிறாள்.

      சென்ற மாதம் தாய்நாட்டிற்குப் போய் வந்தபோதுகூட  மாமியார் தன் கைப்பட தயாரித்த சமையல் பொடி, வத்தல் என இந்தக் குடும்பத்திற்காக அள்ளிக்கொண்டு வந்தாள். இரண்டு நாட்களுக்கு முன் தான் கர்ப்பம் எனத் தெரிவித்தபின் முதலாளி அம்மாவிடம் மாற்றத்தைக் காணத் தொடங்கிய பாஞ்சாலிக்கு ஆச்சரியமாய் இருந்தது.

“மது, பஞ்சாலி இங்க இருக்க வேணாம். நான் வேலைக்கு வேற ஆள  பாத்துக்கிறேன். அவகிட்ட இதப் பத்தி எதுவும் கேக்க வேணாம், புரியுதா?” போனில் தன் மகளுடன் கிசுகிசுத்த முதலாளி அம்மாவை நினைத்து நொந்து போனாள். 

இனித் தனக்குப் பாரமாகி விடுவாள் என்ற முதலாளி அம்மாவின் பயம்தான் இந்த முடிவுக்குக் காரணமென அவளுக்கு நன்றாகவே தெரிந்தது. கொஞ்சம்கூட இரக்கம் இல்லாமல் இன்று தன்னை வேண்டாமெனக் ஒதுக்கித் தள்ளும் குடும்பத்தை நினைக்க நினைக்க அழுகை பொங்கிக் கொண்டு வந்தது. இதயம் வெடித்து விடும்போல் இருந்தது. தாங்கிக் கொண்டாள்.

      மறுநாள் வீட்டிற்கு வந்ததும் அவசர அவசரமாய் அம்மாவின் அறைக்குள் புகுந்து தாளிட்டுக் கொண்டாள் முதலாளி அம்மாவின் மகள் மது.

“பாஞ்சாலி..! கொஞ்ச நாளு அக்கா வீட்டில போயி இரு.  அக்கா பேச்ச கேட்டு நடந்துக்கோ. நான் கூப்பிடற வரைக்கும் அங்கயே இரு, புரியுதா?” அறையிலிருந்து வெளியில் வந்ததும் வராததுமாய்ப் பெரிதாய் ஆணையிட்டார் முதலாளி அம்மா.

“ஏம்மா, நான் என்னம்மா தப்பு பண்ணேன். ஏன் இந்த வீட்ட விட்டு அனுப்பறதுல இவ்வளோ  தீவிரமா இருக்கீங்க. உங்கள அம்மா மாதிரிதானே பாத்துக்கிட்டேன், உங்க பிள்ளையா இருந்தா பிள்ளத்தாச்சின்னுகூட பாக்காம இப்படி அலைய விடுவீங்களா, சொல்லுங்கம்மா!” பொங்கி எழுந்தாள். ஓவெனக் கதறி அழுதாள்.

“உன்ன பிள்ளையா நினைக்கிறதாலதான் அனுப்பி வைக்கிறன்! என் பேரப்பிள்ளையோட திரும்பி வா!”

முதலாளி அம்மாவின் வார்த்தைகளைக் கேட்டு விக்கித்துப் போனாள் பாஞ்சாலி.

 

 

 

சனி, 26 பிப்ரவரி, 2022

#குறுங்கதை 021 #மசாலா டீ

 

“பாட்டி..! ஏன் அப்பாவும் பெரியப்பாவும் எப்ப பாத்தாலும் சண்ட போட்டுக்கிட்டே இருக்காங்க? இப்பவும் அதான் நடக்குது,” கேட்டு விட்டு உச்சுக் கொட்டினான் செல்வம்.

“அதெல்லாம் ஒன்னு இல்ல... நீ மனச போட்டுக் குழப்பிக்காதடாய்யா!”

“இல்ல பாட்டி, நீங்க பொய் சொல்றீங்க. நான்தான் டெய்லி  பாக்கிறனே!” மீண்டும் அதே சலிப்புடன் கூறியவன் பாட்டியின் பக்கம் வந்து நின்று கொண்டான்.

“சரி,  அத விடு. ரொம்ப நாளா மசாலா டீ கேட்ட இல்லீயா. இன்னிக்கு பாட்டி  உனக்குப் போட்டு தரேன். ஆனா, ஒரு கண்டிஷன். நீ பாட்டிக்கு உதவி செய்யனும், சரியா?” பாட்டி சொல்ல தலையைப் பலமாய் ஆட்டிக்கொண்டான் செல்வம்.

பட்டை 2, கிராம்பு 2, ஏக்காய் 4, சின்ன துண்டு இஞ்சி, மூன்று புதினா இலை, பால்  ஒரு கப், சக்கரை 3  தேக்கரண்டி, தேத்துள் 2 மேசைக்கரண்டி  ஆகியவற்றைப்  பாட்டி சொல்ல சொல்ல, மசாலா டீக்குத் தேவையான பொருட்களை உற்சாகமாய் எடுத்து வைத்தான்.

“பாட்டி..!  எல்லாம் ரெடி. வாங்க டீ கலக்கலாம்!” முந்திக் கொண்டு அடுப்பருகே  நின்று கொண்டான். 

வரவேற்பறையில் மூத்தவனுக்கும் இளையவனுக்கும் சண்டை தீர்ந்த பாடில்லை. பாட்டி அதைப் பொருட்படுத்துவதாகவும் இல்லை.

“முதல்ல பட்ட, கிராம்பு, ஏலக்கா, சின்ன துண்டு இஞ்சி எல்லாத்தையும் இடி கல்லுல போட்டு இடிச்சிக்கனும். அளவுக்கு அதிகமா போட்டா கசக்கும் ஐயா!”

“சரி பாட்டி, புரியுது,”

“அப்பறம் அடுப்ப தட்டணும். சின்ன பாத்திரத்தில ஒரு கப் தண்ணீய ஊத்தி அடுப்பு மேல வைக்கணும். இடிச்சி வச்ச எல்லாத்தையும் போட்டு வேக வைக்கணும், புதினா இலையும் இப்ப போட்டுக்கலாம். புதினா போடலனா,  டீ அவ்வளவு நல்லா இருக்காது, சரியா,

“பாட்டி, வாசம் வீட்டையே தூக்குது இல்ல!” வாசத்தை உள்ளே ஆழமாய் இழுத்து இரசித்தவனைப் பார்த்தார் பாட்டி. அடுத்துத் தேத்தூளை எடுத்துப் போடப் போன பாட்டியை அவசரமாய்த்  தடுத்தான் செல்வம்.

“என்ன(னை) ஏன் ஒன்னும் செய்ய விடமாட்றீங்க?” முகத்தைத் திருப்பிக்கொண்ட செல்வத்தைப் பார்த்ததும் பாட்டிக்குச் சிரிப்பு வர,  அதை அடக்கிக் கொண்டார்.

“சரி வாடா செல்லம்,  நாம சேர்ந்தே செய்யலாம். இந்தத் தேத்தூள போட்டு நல்லா கொதிக்க விடு. அப்பறம் சீனிய போடலாம். கடைசியா பால ஊத்திக் கொதிக்க வச்சுட்டா மசாலா டீ ரெடி! அடுப்ப மெதுவா வச்சி பால நல்ல கொதிக்க விட்டுப் பாரு, மசாலா டீ அப்படித்தான் இருக்கும்!”

பாட்டியுன் பூரிப்பைப்  பார்த்துப் சின்னதாய்ப் புன்னகைத்தான் செல்வம்.

“மசாலா டீ சூப்பரா வந்திருக்கு இல்ல பாட்டி!”

“ஆமாய்யா,”

மசாலா டீயின் சுவையில் வரவேற்பறையில் நடந்துகொண்டிருக்கின்ற சண்டையை மறந்து போனான் செல்வம்.

வெள்ளி, 25 பிப்ரவரி, 2022

#குறுங்கதை 020 #சொல் மனமே

 

 

சில மணி நேரங்களாக என்னைப் பற்றிய பேச்சில் ஆழ்ந்திருந்தவர்களைப் பார்க்க வேடிக்கையாய் இருந்தது. என் வாழ்க்கையை யார் யாரோ முடிவு செய்வது எந்த வகையில் நியாயம் எனத் தெரியவில்லை. உரிமைகள் பறிக்கப்படும்  இடத்தில் இருப்பதில் அர்த்தமில்லை எனத் தோன்றியது. வெற்று மனத்துடன் அறைக்குள் புகுந்து என்னை நானே சிறைப்படுத்திக் கொண்டேன்.

எப்பொழுது என் குடும்பத்திற்குப் பாராமாகத் தோன்றத் தொடங்கினேன் என யோசித்துப் பார்க்கிறேன். பதில் தெரியவில்லை. வறுமை எனும் கொள்ளிவாய்ப் பேயின்  பசிக்கு என் குடும்பம் இரையாகிக் கொண்டிருப்பதற்கு நான் எந்த வகையில் காரணமாவேன்? புரியவில்லை.

“செல்லக்குட்டி, நம்ம குடும்ப நிலம பத்தி உனக்கே நல்லாவே தெரியும். உங்கப்பாவோட சம்பளத்தில் குடும்பத்த ஓட்ட முடியல! உங்க நாலு பேரையும் நல்லா படிக்க வைக்க முடியல... அதனால...”

அதனால?”

“அதனால... உன்ன ஹோம்ல சேர்த்திடலாம்னு இருக்கோம்!”

    இரண்டு மூன்று நாட்களுக்கு முன் அம்மா சொன்ன வார்த்தைகள் தோட்டாக்களாய் நெஞ்சைத் துளைத்தன. இரண்டு அண்ணன்களும் தம்பியும் இருக்கும்போது நான் ஏன் பலிகடா ஆக்கப்பட்டேன்? பெண் பிள்ளை என்பதுதான் பிரச்சனையா? வெளியில்தான் பெண்களுக்கு மதிப்பில்லையென்றால், குடும்பத்திலுமா? இதற்கெல்லாம் பெற்ற அம்மாவே மூலக்காரணமாய் இருப்பதுதான் மனத்திற்குள் பெரும் வலியைத் தந்தது. அவரும் பெண்தானே. ஒரு பெண்ணே மற்றொரு பெண்ணைத் துச்சமாக நினைத்தால் எப்படி? மனத்திற்குள் ஆயிரமாயிரம் கேள்விகள், போராட்டங்கள்.

    அறைக்கதவு தட்டப்படும் சத்தம் எரிச்சலை வரழவழைத்தது. திறக்கத் துளிகூட விருப்பமில்லை. மீண்டும் மீண்டும் அதே சத்தம். மண்டைக்குள் குடைச்சல் தாங்க முடியவில்லை. நான் கதவைத் திறந்து பார்ப்பதற்கும் அம்மா மீண்டும் கதவைத் தட்ட கையைத் தூக்குவதற்கும் சரியாய் இருந்தது. அம்மாவின் முகத்தைப் பார்க்க விரும்பாமல் அறைக்குள் நுழைந்து கொண்டேன். அம்மா நிழலாய்ப் பின் தொடர்ந்து உள்ளே வந்தார். என் முகத்தைத் தன் இரு கரங்களால் தாங்கிப் பிடித்தார்.

“செல்லக்குட்டி...!  இந்த வீட்டிலேயே நீதான்  ரொம்ப நல்லா படிக்கிற. எங்களோட இங்க இருந்தீன்னா, உன் வாழ்க்கை வீணாப் போயிடும். நீயாவது நல்ல சாப்பாடு சாப்புடு! நல்லா படி. உனக்காக, உன் எதிர்காலத்துக்காக நான் இத செஞ்சித்தான் ஆகணும், புரிஞ்சிக்கோடா செல்லம்!” ஓவெனக் கதறி அழத் தொடங்கிய அம்மாவைக் கட்டி அணைத்துக் கொண்டேன். 

வியாழன், 24 பிப்ரவரி, 2022

#குறுங்கதை 019 #ஏழைகள் நாங்கள்

 

 

இந்த மருத்துவமனையில் மட்டும் ஏன்தான் எப்பொழுதும் கூட்டம் நிறைந்து வழியுமோ தெரியாது. ஒவ்வொரு முறையும்  உட்கார இடம் கிடைக்காமல் அவன் படும் பாடு அவனுக்குத்தான் தெரியும். ஏதோ இன்று அதிஷ்டவசமாய் இடம் கிடைத்துவிட சந்தோசமாய் உட்கார்ந்து கொண்டான். 

 

ம்மா... ரொட்டி தா ரொட்டி... ரொட்டி வேணும்...!” 

 

“அழாதடா... பேசாம ஒக்காரு!”

 

“ரொட்டி வேணும்...! தாம்மா... ரொட்டி தாம்மா 

 

பின் இருக்கையிலிருந்து வந்த சிறுவனின் அழுகை  எரிச்சலை மூட்டியது. வெறுப்புடன் திரும்பிப் பார்த்தான் நடுத்தர வயது பெண்ணொருவள்  சிறுவனைச் சமாதானப்படுத்தப் போராடிக் கொண்டிருந்தாள். மெலிந்த உடல், கருத்த மேனி. கசங்கிய உடை.

 

பையிலிருந்த பால் போத்தலை எடுத்துச் சிறுவனிடம் நீட்டினாள். அதில் பாலுக்குப் பதிலாகக் கருப்பாய் ஏதோ ஒன்றை நிரப்பி வைத்திருந்தாள். வறக்காப்பியாக இருக்க வேண்டும்.  சிறுவன் போத்தலை வாங்க மறுத்தான். முரண்டு பிடித்த சிறுவனை இறுக அணைத்து அவன்  வாயில் போத்தலைத் திணித்தாள். சிறுவன் கோபமாய்த்  தட்டி விட,  போத்தல் தூரப் போய் விழுந்தது.  பால் தரையில் சிந்த சுற்றி இருந்த கூட்டம் முகத்தைச் சுழித்துக் கொண்டு வேடிக்கை பார்த்தது.

 

நம்ம இனமே இப்படித்தான். எந்த எடத்தில எப்படி நடந்துக்கனும்னு தெரியாது!'வாய்க்குள்ளே முணுமுணுத்தான்.

 

“ஏம்மா... அவன் கேக்கிற ரொட்டிய வாங்கித்தான் கொடுத்திடேன். சத்தமா இருக்குலசலிப்புடன் சொன்னான்அவள் வைத்த கண் வாங்காமல் அவனையே பார்த்தாள்.

 

காசு இருக்கா இல்லையா? இல்ல... நான் தரட்டுமா?அவன் வார்த்தையில் இரக்கத்தை விட இறுமாப்புத் தெரிந்தது. 

 

அதெல்லாம் வேணாங்கண்ணே!” சுருக்கமாய்ப் பதில் சொன்னாள்

 

“திமிர் கொஞ்சம் அதிகம்தான்!” மீண்டும் முணுமுணுத்தான்.

 

சிறுவன் கீழே விழுந்து கைகால்களை உதைத்து அழ ஆரம்பித்தான். 

 

ஏம்மா...! ஒரு ரொட்டிகூட வாங்கித் தர முடியாதா?அவள் முகத்திற்கு நேராகவே கேட்டு விட்டான் 

 

வர வழியில் வயசானவரு ஒருத்தரு பசிக்குதுன்னு  சொன்னாருங்கண்ணே. இருந்த மூனு  வெள்ளியில ஒரு வெள்ளிக்கு பன்னு வாங்கிக் கொடுத்திட்டேன். மிச்சம் ரெண்டு வெள்ளிதான் இருக்கு. பஸ் டிக்கட்டு வாங்கனும். அதோட பசியெல்லாம் எங்களுக்குப் புதுசு இல்லங்கண்ணே. இப்பவே பசிய தாங்க கத்துக்கிட்டாதான் இந்த உலகத்தில வாழ முடியும்!” இயல்பாய்ச் சொன்னவள் பதிலுக்காகக் காத்திராமல் சிறுவனைத் தூக்கிக் கொண்டு ஓரமாய் ஓர் இடத்தைத் தேடி உட்கார்ந்து கொண்டான்.

#குறுங்கதை 100 #நூறாவது நாள்

    எத்தனை எத்தனையோ போராட்டங்கள், சவால்கள், தடைகள். கடந்து வந்த மாயம் தெரியவில்லை. ஏடுகள் ஒவ்வொன்றாய்ப் புரட்டிப் பார்த்தான் வெற்றிமாறன். தொ...