புதிய
தலைமையாசிரியர் தங்கமணி வந்ததிலிருந்து பள்ளி
மாற்றமெனும் புது வண்ணத்தைப் பூசத் தொடங்கியிருந்தது. அது அழகாகவும் இருந்தது.
மலேசியக் கலாச்சாரம் வேறுன்ற வேண்டும் என்ற அவரது சிந்தனை எல்லா நிகழ்ச்சிகளிலும்
வடிவம் பெறத் தொடங்கியது. அதன் விளைவாய் உதித்ததுதான் இந்த நோன்புப் பெருநாள்
கொண்டாட்டம்.
காலையிலேயே பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர், செயலவை
உறுப்பினர்கள், ஆசிரியர், மாணவர்களோடு நோன்புப் பெருநாள் கொண்டாட்டம் பள்ளி
மண்டபத்தில் அரங்கேறியது. பள்ளி அலுவலகத்தில் பணி புரியும் மலாய்க்கார
ஊழியர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
மாணவர்கள் படைப்பிலும் மலேசிய மண்ணின் கலாச்சாரம் மணம் வீசி
அரங்கைக் குளிரச் செய்தது. தலைமையாசிரியருக்குப் பரம திருப்தி. அருகிலிருந்த
ராஜனைப் பக்கத்தில் வருமாறு சாடை காட்ட, அடுத்த நொடி ராஜன் அவர் பக்கத்தில்
ஆஜரானார்.
“வந்தவங்க
எல்லாரையும் கொஞ்சம் நல்லா கவனிச்சிக்குங்க சார்! நீங்கதான் இங்க பழைய ஆளு.
உங்களுக்குத்தான் இங்க எல்லாரையும் தெரியும்!” தலைமையாசிரியரின் பாராட்டு ராஜனை உற்சாகப்படுத்தியது.
மூட்டு வலியையும் மறந்து பம்பரமாய்ச் சுழலத் தொடங்கினார். நோன்புப்
பெருநாளையொட்டி ஊழியர்களை மகிழ்ச்சிப்படுத்த பலகாரக்கூடைகள் வழங்கப்பட்டன. தலைமையாசிரியர்
கைகளிலிருந்து அவற்றைப் பெற்றுக்கொண்டபோது ஊழியர்களில் முகமெல்லாம் மகிழ்ச்சி
ரேகை.
மீண்டும்
தலைமையாசிரியரின் கண்கள் ராஜனைத் தேட, அடுத்த கட்டளைக்காக அவர் எதிரே பவ்வியமாய்
நின்றுகொண்டார் ராஜன்.
“எல்லாம்
நல்லவிதமா நடந்துகிட்டு இருக்குங்க சார். மனசெல்லாம் நெறைவா இருக்கு. விருந்தையும்
அப்படியே கொஞ்சம் பாத்துக்குங்க சார்!’’
“கவலய
விடுங்க சார்! நான் இருக்கேன்!” அறுபதை நெருங்கிக் கொண்டிருந்தாலும் கட்டிளங்காளையாய்
விசுவரூபம் எடுத்தார் ராஜன்.
கெத்துப்பாட்,
லெமாங், ரொட்டி ஜாலா என மேசை மேல் வரிசைகட்டி நின்ற உணவுகள் மனநிறைவைத் தந்தன. லெமாங்கிற்கென
மலாய்க்காரர் உணவகத்தில் ஆர்டர் செய்திருந்த ரெண்டாங்கின் வாசம் மூக்கைத்
துளைத்தது. அடுத்த சில நிமிடங்களில் சிற்றுண்டிச் சாலை நிறைந்து வழிந்தது. மலாய்க்காரர்களுக்கென
ஒதுக்கப்பட்ட உணவிடத்தில் கூட்டம் குழுமத் தொடங்கியது. ராஜனின் கண்கள் மலாய்க்கார
ஊழியர்களைத் தேடின. ஒருவரையும் அங்குக் காணாது தவித்துப் போனார் ராஜன். நேரம் கடந்தது.
வாடிய முகத்துடன் ஓரமாய் நின்று கொண்டார்.
“ராஜன்
சார்! என்னாச்சி? ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க.”
“சார்!”
“சொல்லுங்க
சார்!”
“அது
வந்து... நம்ம கிராணி நோராய்னிகிட்ட ஏன் சாப்பிடலன்னு கேட்டேன் சார். அதுக்கு,
உங்க சாப்பாட ஒரு கை பார்த்திடலாம்னு ஆசையா வந்தோம். இட்லி, தோசய்ய நாட்டுக் கோழி
கறியில தொட்டுச் சாப்பிட எங்களுக்கு ரொம்ப பிடிக்கும். மொறுமொறு பருப்பு வட ருசியா
இருக்கும். ஆனா, அதெல்லாம் இன்னைக்கு இல்லையேன்னு வருத்தப்பட்டாங்க சார்!”
தலைமையாசிரியரின்
இதழோரத்தில் சின்னதாய் ஒரு புன்னகை தோன்றி மறைந்தது.
