வியாழன், 31 மார்ச், 2022

#குறுங்கதை 054 #இறந்தநாள்

 

      பிறந்தநாளுக்கு இன்னும் ஒருநாள்தான் இருக்கிறது.  எப்படியும் நண்பர்கள் நடுநிசியில் எழுப்பி சர்பரைஸ் என்ற பெயரில் இம்சைபடுத்தி விடுவார்கள். காலேஜ் வந்த நாளிலிருந்து இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. எது எப்படியோ அவர்கள் சர்ப்ரைஸ்! என்று கூச்சல் போட்டு ஆர்ப்பாட்டம் செய்வதும், இன்ப அதிர்ச்சியில் இருப்பது போல் மிகையாய் நான் பாவனை செய்வதும் பழகிப் போய் விட்டது. இன்று இரவும் அதுதான் நடக்கபோகிறது. சின்னதாய் ஒரு கேக், பீப்பீ ஊதல்கள், தலையில் அடித்து என் முடியை நாசப்படுத்த ஆளுக்கொரு முட்டை என எல்லா ஏற்பாடும் இந்நேரம் தயாராகியிருக்கும்.

      இன்று   சிவராத்திரிதான். முன்னேற்பாடாகக் கொஞ்சம் தூங்கிக் கொள்வதுதான் புத்திசாலித்தனமென என் மூளை சொல்ல, கடைசி பாடத்திற்கு டிமிக்கிக் கொடுத்து விட்டு வீடு வந்து சேர்ந்தாகி விட்டது. கதவைத் திறந்து உள்ளே செல்ல, வீடெல்லாம் என்றும் இல்லாத மணம். என் அம்மா வைக்கும் நாட்டுக்கோழி கறி மணம். சமையலறையை எட்டிப் பார்க்கிறேன். யாரும் சமைத்ததற்கான அடையாளம் இல்லை. உடம்பு சிலிர்த்துக் கொள்கிறது. பின்னால் இருக்கும் சீன ஆண்ட்டியின் வீட்டைச் சன்னல்வழி பார்க்கிறேன். பின் கதவு, சன்னல் எல்லாம் அடைத்துக் கிடக்க, ஏமாற்றம் தொற்றிக் கொள்கிறது. தோளில் தொங்கிக் கொண்டிருந்த புத்தகப்பையை அப்படியே சாப்பாட்டு மேசை மேல் போட்டு விட்டுக் குளியலறை செல்கிறேன்.

      ஆடைகளைக் களைந்து விட்டு, மதிய வேளையில் சூடான தண்ணீரில் குளிப்பது ஒரு வகையான சுகம். அதை அனுபவித்தால் மட்டுமே தெரியும். ஹீட்டரோடு ஒட்டியிருந்த குழாய் நீரைத் திறக்கிறேன். சில்லென்ற நீர் உடம்பை நனைக்க எகிறிக் குதிக்கிறேன். ஹீட்டரைத் தட்ட மறந்து போனது நினைவுக்கு வருகிறது. யாராவது தட்டி விட்டால் நன்றாக இருக்குமே என்று நினைக்க, அடுத்த கணம் சுடுநீர் உடம்பை நனைக்கிறது. ஹீட்டரை யார் தட்டியிருக்கக் கூடும்? மூளை பரபரப்பாய் யோசிக்கிறது. பயம் கௌவிக்கொள்கிறது. துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு அவசர அவசரமாக வெளியே வருகிறேன். வீட்டின் அமைதி என்னை அச்சுறுத்துகிறது.

நண்பனுக்கு அழைத்துப் பேச எண்ணம் தோன்ற, கைப்பேசியைத் தேடுகிறேன். புத்தகப்பையில் வைத்தது நினைவுக்கு வர, மேசை மேல் வைத்த புத்தகப் பையைத் தேடுகிறேன். காணவில்லை. குழப்பத்தில் தலையைச் சொரிகிறேன். நண்பர்கள் வேலையாக இருக்குமோ என்ற சந்தேகம். மூன்று அறைகளையும் திறந்து பார்க்கிறேன். யாருமில்லை. மூன்றாவது அறையில் கோழிக்கறியின் மணம் அதிகமாக இருப்பதை உணர்கிறேன். உடல் சில்லிடுகிறது.  பட்டெனக் கதவைச் சாத்திவிட்டு ஓட்டமும் நடையுமாய் வரவேற்பறைக்குச் செல்கிறேன். முகமெல்லாம் வியர்வைத் துளிகள். மனத்தில் படபடப்பு. மூர்ச்சையாகிப் போயி விடுவேனோ என்ற அச்சம் மனத்தில் பரவத் தொடங்குகிறது.

“ஏன்டா பயந்திட்டியா?” முதுகுக்குப் பின்னாலிருந்து குரல் வர, திரும்பிப் பார்க்கிறேன். என் பாசமிகு அம்மா புன்னகையோடு கைகளைக் கட்டிக் கொண்டு நிற்கிறார்.

“உன் பிரண்ட்ஸ்தாண்டா, என்ன(னை) போன் பண்ணி வரச்சொன்னாங்க. சர்ப்ரைஸ் கொடுக்கச் சொன்னாங்க. அதான் வந்தேன். நீ என்னடான்னா இப்படிப் பயந்து சாகற!” சிரித்துக் கொண்டே பேசிய அம்மாவைப் பார்க்கப் பார்க்கப் கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

“ம்மா, நீங்க ரொம்ப மோசம்மா. என் பொறந்தநாள கொஞ்ச நேரத்தில இறந்தநாளா மாத்தியிருப்பீங்க, போங்க!” அலுத்துக் கொள்கிறேன்.

“சரிடா... அப்பறமா சாப்பிட கோழிக்கறி வச்சிட்டேன். உனக்குக் கேசரி பிடிக்கும் இல்லையா. போய் கேசரி மாவு வாங்கிட்டு வரீயா?” கெஞ்சலாய்க் கேட்டார் அம்மா.

மோட்டாரை எடுத்துக் கொண்டு உற்சாகமாய்ப் புறப்படுகிறேன். அம்மாவிடமிருந்து அழைப்பு வருகிறது.

“அதற்குள் என்ன அவசரம்!” சலித்துக் கொண்டு அழைப்பை எடுக்கிறேன்.

“டேய் ராஜு, சோரிடா, உன் பிரண்ஸ்செல்லாம் என்ன(னை) இன்னைக்கு வீட்டுக்கு வரச் சொன்னாங்க. அப்பாவுக்கு உடம்பு முடியல. வர முடியாம போச்சி. பீல் பண்ணாதடா ப்ளீஸ்!”  அடுத்த நொடி என் கைப்பேசி அதுவாய்க் கைநழுவி கீழே விழுந்து சிதறுகிறது.

புதன், 30 மார்ச், 2022

#குறுங்கதை 053 #களைகள்

 

எத்தனையோ முறை வீட்டிற்கு அழைத்தும் வராத மாமியார், இம்முறை மறுப்பேதும் சொல்லாமல் வந்து வீட்டில் தங்கியது மரகதத்தின் குடும்பத்திற்கே வரமாய் அமைந்தது. திருமணமாகி இந்த ஐந்து ஆண்டுகளில் இப்பொழுதுதான் தங்களோடு முழுமையாய் ஒரு மாதம் தங்கி காலத்தைக் கழிக்கும் மாமியாரை உள்ளங்கையில் வைத்துத் தாங்கினாள் மரகதம்.

“அத்த... உங்களுக்கு ஏதாவது சாப்பிடனும்னு ஆசையா இருந்தா சொல்லுங்க. நான் செஞ்சிக் கொடுக்கிறேன்!” வந்த நாளிலிருந்து கெஞ்சாத குறையாய்க் கேட்டு விட்டாள். ஆனால், அப்படியேதும் இதுவரை மாமியார் கேட்டுச் சாப்பிடாதது அவளுக்கு ஒரு குறையாகவே இருந்தது.

“அத்த, வாங்க சும்மா அப்படியே டவுன்னுக்கு போயிட்டு வரலாம். குட்டியா ஒரு ஷாப்பிங். அப்புறம் உங்களுக்குப் பிடிச்ச ஒரு மசாலா டீ. ஓகேவா?” கண்ணிமைகள் பட்டாம்பூச்சியாய் மூடித் திறக்க  ஆவலோடு தன் மாமியாரைப் பார்த்தாள்.

“இல்லம்மா, நான் வரல. என்னத்துக்கு தேவையில்லாத செலவு? மசாலா டீய விட்டுலேயே கலக்கிக் குடிச்சிக்கலாம்!” பதிலுக்காகக் காத்திராமல் செந்தூரப்பூவே தொடர் நாடகத்துள் மூழ்கிப் போனார் மாமியார்.

மரகதத்துக்கு உள்ளூர வருத்தம் இருந்தாலும் காட்டிக் கொள்ளாமல் சமையறைக்குள் புகுந்து கொண்டாள். கால் மணி நேரத்திற்குள் மணக்க மணக்க மசாலா டீயுடன் வரவேற்பறைக்கு வந்தாள். டீயை மாமியாரிடம் நீட்டினாள். முகத்தில் சலனமேதும் இல்லாமல் தம்ளரை வாங்கிப் பக்கத்திலிருந்த சின்ன மேசை மேல் வைத்துக் கொண்டார். உடனே டீயைச் சுவைத்துப் பார்த்து மாமியார் எதையாவது சொல்வாரென எதிர்பார்த்த மரகதத்திற்கு ஏமாற்றமாய்ப் போக அறைக்குள் புகுந்து கொண்டாள்.

அவள் மாமியாரைத் தேடித் தேடிப் போவதும் மாமியார் அவளைத் தவிர்க்கப் பார்ப்பதும் தொடர்கதையாய் இருப்பதை எண்ணி வெந்து போனது அவள் மனது.

“அத்த... உங்களுக்கு ரோஜா செடின்னா ரொம்ப பிடிக்குமுன்னு எனக்குத் தெரியும். அதான் உங்களுக்காக  ஷோப்பில நாலு செடி ஆர்டர் பண்ணியிருக்கேன். வீட்டுக்குப் போறப்ப மறக்காம எடுத்திட்டுப் போங்க!” சொல்லும்போதே ரோசாவைப் போல மலர்ந்து போனது அவள் முகம். அதற்கும் ஒரு உயிரற்ற பார்வையைப் பரிசாய்த் தந்த மாமியாரைப் புரிந்துகொள்ள முடியாமல் தவித்துப் போனாள் மரகதம்

இன்னும்  எப்படியெல்லாமோ முயற்சி செய்து விட்டாள். ஆனால், மாமியாரின் இறுக்கத்தை தளரச் செய்ய முடியவில்லை. இதோ இன்றும்கூட கொல்லையில் புல்பூண்டுகளைப் பிடுங்கிக் கொண்டிருந்த மாமியாரின் அருகில் போய் நின்று கொண்டாள்.

“அத்த, நான் கேக்கிறேன்னு தப்பா நெனைக்காதீங்க. என் மேல உங்களுக்கு அப்படி என்ன கோபம்? என் மனசறிஞ்சு உங்ககிட்ட தப்பா பேசினது இல்ல, நடந்துகிட்டதும் இல்ல. அப்பறம் ஏன் என்கிட்ட நெருங்க மாட்டிறீங்க!” முகத்திற்கு நேராகவே கேட்டுவிட்டு விசும்பத் தொடங்கினாள்.

“அழாத மரகதம். உன் மேல ஒரு தப்பும் இல்ல. பிள்ளைங்க வீட்டில தங்கறது நமக்கு மரியாத இல்லன்னு நானா நெனைச்சுகிட்டேன். அதனாலதான் போனமா வந்தமான்னு இருந்தா நமக்கு மரியாதன்னு இருந்திட்டேன்! என் மனசில இருந்த களையை இதுநாள் வரைக்கும் பிடுங்கி எறிய மறந்திட்டேன். அதான்...” புற்களைப் பிடுங்கிக் கொண்டே பேசிய மாமியாரைக் கண் கொட்டாமல் பார்த்தாள் மரகதம். அவளும் மாமியாரோடு சேர்ந்து களையெடுக்கத் தொடங்கினாள். இப்பொழுது கொல்லை சுத்தமாய்த் தெளிவாய் இருந்தது. மாமியாரின் முகத்தைப் போல.

செவ்வாய், 29 மார்ச், 2022

#குறுங்கதை 52 #இருபதுக்கு எழுபது

 

முதல்நாள்  பேசி முடிவெடுத்தபடி சரியாய் இரவு எழு மணிக்கெல்லாம் அம்மா வீட்டில் அனைவரும் கூடி விட்டனர். நாதன், அப்பாவின் சாய்வு நாற்காலியில் ஒய்யாரமாய்ச் சாய்ந்து கொண்டான்.  தங்கை ஜானகி தன் இரண்டு மாதக் கைக்குழந்தையோடு  வீட்டின் ஒரு மூலையில் ஒடுங்கி அமர்ந்துகொண்டாள். இரண்டாவது தங்கை பவானி அம்மாவின் அணைப்பில் அடைக்கலமானாள். அடுத்த ஒரு மணி நேரத்தில் இங்கு என்னெவெல்லாம் நடக்கப்போகிறது என்பதை கற்பனை செய்து பார்த்துக் கொண்டாள்.

“அம்மா! அப்பா இறந்து ஒரு மாசம் ஆகுது. இன்னும் அப்பாவோட சொத்த பத்தி நாம பேசி முடிவெடுக்கல. அப்பா, இருக்கிற இந்த ஒரு வீட்ட உங்க பேருல எழுதி வைச்சிட்டாரு. நாளைக்கு உங்களுக்கு ஒன்னு ஆச்சின்னா, யாருமே இந்தச் சொத்த உரிம கொண்டாட முடியாம போயிடும். அதனால....” குரலைச் செருமிக் கொண்டே அம்மாவின் மேல் பார்வையைப் பதித்தான் நாதன்.

“அதனால... என்னடா பண்ணப்போற?” புருவங்களை உயர்த்தி மகனைப் பார்த்தார் அம்மா.

“உடனே, சொத்த பேரு மாத்தி எழுதி வைக்கிறது நல்லதுன்னு தோனுது!” பேசிக்கொண்டே தங்கைகளைப் பார்த்தான். அவன் பார்வையில் கலந்திருந்த அலட்சியத்தையும் ஏளனத்தையும் யாரும் கவனிக்காமல் இல்லை. ஆனால், அவர்கள் எதையும் பேசும் நிலையில் இல்லை. அப்பாவின் இறப்பால் மீளாத் துயரில் இருக்கும் அவர்களுக்கு அப்பாவின் சொத்தைப் பற்றியெல்லாம் யோசிக்கத் தெம்பில்லை.

“இருக்கிறது ஒரு வீடு. இருபதுக்கு எழுபது சைஸ்ல சின்ன வீடா இருந்தாலும் அத மூனு பேரு பேருலேயும் எழுதி வைக்கிறதுதான் ஞாயம்னு தோனுது. நீ என்னடா சொல்ற?”

“என்னம்மா பேசறீங்க? இந்த வீட்டுக்காகச் சின்ன வயசுலேர்ந்து மாடா மாதிரி உழைச்சுக் கொட்டினது நானு. அப்படின்னா எனக்குத்தான இந்த வீட்டு மேல உரிம அதிகம்?” குரலை உயர்த்தினான்.

“அப்படின்னா... இந்த பொம்பளப்பிள்ளைங்க கதி?”

“அது எனக்குத் தெரியாதும்மா. நாளைக்கு நாம இந்த வீட்ட என் பேருக்கு மாத்தப் போறோம். நீங்க காலையில ஒன்பது மணிக்குக் கிளம்பி நில்லுங்க. நான் வந்து ஏத்திக்கிறேன். புரியுதாம்மா?” வெட்டு ஒன்று துண்டு இரண்டு கணக்காய்ப் பேசினான்.

“பாவம்டா இந்தப் பிள்ளைங்க. அதுங்களுக்கும் பங்கு கொடுக்கிறத பத்தி ஏன்டா யோசிக்க மாட்டேங்கிற?” பவானியை அப்படியே மார்போடு இறுக அனைத்துக்கொண்டு புலம்பினார் அம்மா.

       சொத்தாசை அவன் இதயத்தைக் கல்லாய் ஆக்கியதோ என்னவோ, தாயின் புலம்பலோ தங்கையின் பரிதவிப்போ அவனுக்குப் பெரிதாய்த் தெரியவில்லை. நினைத்ததைச் சாதித்துவிட்ட திருப்தியில் வீடு திரும்பியவனுக்குக் காலைப் பொழுதைக் காணும் பாக்கியம் இல்லாமல் போனது. இதயமே இல்லாதவனுக்கு மாரடைப்பாம். குடும்பமே இன்னொரு இழப்பைத் தாங்க முடியாமல் தலையிலும் மார்பிலும் அடித்துக் கொண்டு அழுதது. அவனைப் புதைப்பதற்கு அப்பாவின் அருகில் ஆறடி நிலம் மட்டுமே ஒதுக்கப்பட்டது. அப்படியென்றால் அந்த இருபதுக்கு எழுபது?

திங்கள், 28 மார்ச், 2022

#குறுங்கதை 051 #துரோகம்

 

குடும்பத்தின் துரோகத்தை மறக்க முடியாமல் நொந்துதான் போயிருந்தான் பார்த்திபன். சொந்தக் குடும்பமே சுயநலமாய் நடந்துகொண்டதை அவன் மனம் ஏற்க  மறுத்தது. அவர்கள் தனக்கு இழைத்த கொடுமை மீண்டும் மீண்டும் கண் முன் வந்து போனது. விரக்தியின் உச்சத்தில் இருந்தான் அவன். உலகமே பொய்யாய்த் தோன்றியது அவனுக்கு. தன்னைச் சுற்றி அமர்ந்திருந்தவர்கள் எல்லாமே பொய்யாகவே தெரிந்தனர். இனி மறந்தும் அவர்களை நம்பிவிடக்கூடாது. தீர்மானம் செய்து கொண்டான்.  

நொடிப்பொழுதில் பார்வை சம்பந்தமில்லாமல் பக்கத்து மேசையில் அமர்ந்திருந்த பெரியவர் மீது படிந்தது.  தனிமையில் அமர்ந்திருந்தார். அவரும் தம்மைப் போலத்தானோ எனத் தோன்றியது. அவரை முழுதாய் நோட்டமிட்டான். அவர் நேர்த்தியான தோற்றம் படித்தவரெனப் பறைசாற்றியது. மடிப்புக் கலையாத ஆடை. முழுக்கை வெள்ளைச் சட்டையைக் கறுப்புக் காற்சட்டைக்குள் விட்டிருந்தார்.  இடுப்பில் அதற்குப் பொருந்தமாக கறுப்பு நிறத்திலான இடைவார். அழகான கறுப்புக் காலணிகள்.  அவருக்கு எப்படியும் வயது அறுபதைத் தொட்டிருக்க வேண்டும்.

தன் நாற்காலியை விட்டு எழுந்திருக்க முற்பட்டார். எழுந்திருக்க விடாமல் தடுத்தான் உணவகப் பணியாள். பெரியவர் முரண்டு பிடித்து எழுந்து நின்றார். அவரைப் பிடித்துத் தள்ளி மீண்டும் நாற்காலியில் உட்காரச் செய்தான் அந்த விடாக்கண்டன். பெரியவர் தடுமாறி நாற்காலியில் முனையில் உட்கார்ந்துகொண்டார். கொஞ்சம் விட்டிருந்தால் கீழே விழுந்திருப்பார். நாற்காலியைச் சரிபடுத்தி உட்கார்ந்து கொண்டவரின் பார்வை உணவகத்தைச் சுற்றி வந்தது.  காணாமல் போன எதையோ தேடும் தவிப்பு அவர் பார்வையில் தெரிந்தது.

உதவி செய்தால்தான் என்ன? ஆழ்மனத்தில் சன்னமான குரலில் யாரோ சொல்ல அவரை நெருங்கிச் சென்றான். கீழே விழாமல் இருக்க வலது கையால் மேசையை பிடித்துக் கொண்டிருந்த அவர் தோளைத் தட்டி அழைத்தான். தூக்கிவாறிப் போட்டது அவருக்கு. குற்ற உணர்ச்சியால் பின்னால் இரண்டடி எடுத்து வைத்து நின்றவனை வைத்த கண்  வாங்காமல் பார்த்தார்.

“சார், உங்கள ரொம்ப நேரமா பாக்கிறேன். என்னத்தையோ தேடிக்கிட்டு இருக்கீங்க? சொன்னா நான் தேடிக் கொடுக்கிறேன், சரியா?” கல்லும் கரைந்து போகும் தோரணையில் கேட்டான்.

பதில் சொல்லாமல் புலியைக் கண்டு மிரளும் புள்ளிமானைப் போல் வெறித்துப் பார்த்தார். பார்வையில் பயம் சேர்ந்து கொண்டது.

“சார்... நான் கேக்கிறது புரியுதா? உங்களுக்கு ஏதாவது உதவி வேணும்னா சொல்லுங்க. நான் செய்றேன்!” அழுத்தமாய்ச் சொன்னான்.

அவர் பார்வையில் மாற்றம் இல்லை. ஆனால், ஐயத்தின் குறீயீடு அதிகரித்திருந்தது. சற்று முன் பார்த்த அதே பணியாள் அவர் அருகில் வந்து நின்று கொண்டான்.

“சார், அவரு எங்க முதலாளியோட அப்பா. அவர தொந்தரவு பண்ணாதீங்க. அவரு பழசெல்லாம் மறந்துட்டாரு. அதனால, முதலாளி அவர இங்க கூட்டிகிட்டு வந்திடுவாரு. நாங்கதான் அவரு எங்கயும் போகாம பார்த்துக்குவோம்!” சொல்லி விட்டு அடுத்த மேசையைத் துடைக்கச் சென்று விட்ட பணியாளை மீண்டும் தொந்தரவு செய்ய அவனுக்கு மனமில்லை. இப்பொழுது அந்தப் பெரியவைப் பார்க்க அவனுக்குப் பொறாமையாக இருந்து. 

ஞாயிறு, 27 மார்ச், 2022

#குறுங்கதை 050 #அலாரம்

 

காலையிலிருந்தே எதுவும் சரியாக நடப்பதாக அருணனுக்குத் தெரியவில்லை. என்றும் அவனை  எழுப்பி விடும் அலாரம் இன்று ஏனோ துரோகம் செய்து விட்டது. அடித்துப் பிடித்து எழுந்து பள்ளிக்குச் சென்று சேர்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. வியர்க்க விறுவிறுக்க பள்ளி அலுவலகத்தைச் சென்றடைந்தபோது சரியாக மணி ஏழு இருபது. ஏழு முப்பதற்கெல்லாம் படிவம் ஐந்திற்கான தமிழ்ப்பாடம் தொடங்கி விடும். வகுப்பில் நுழைய தாமதமாகிவிட்டால் பிள்ளைகள் அவர்கள் வேலையைக் காட்ட ஆரம்பித்து விடுவார்கள்.

ஓட்டமும் நடையுமாய் ஆசிரியர் அறைக்குச் சென்று மடிக்கணினிப் பையை மேசை மேல் வைத்துவிட்டுக் கழிவறைக்குச் சென்றான். குழாய் நீரில் முகத்தை அலம்பிக் கொண்டான். கைக்குட்டையால் முகத்தை நன்றாகத் துடைத்துவிட்டு ஒரு முறை கண்ணாடியில்  பார்த்துக் கொண்டான். தூங்கு மூஞ்சாய் இல்லாமல் கொஞ்சம்  பார்ப்பதற்குச் செழிப்பாகத்தான் இருந்தான். கலைந்திருந்த முடியைச் சீவிச் சரிபடுத்திக்கொண்டான். வகுப்பிற்குச் சென்று காலடி எடுத்து வைப்பதற்கும் முதல் பாடத்திற்கான மணி அடிப்பதற்கும் சரியாக இருந்தது. வழக்கம்போல் மாணவர்களைத் தன்வசப்படுத்தி பாடத்தை நிறைவாய் நடத்தி முடித்தான்.

வகுப்பறையை விட்டு வெளியேறும் வேளை கைப்பேசி அலற, எடுத்துப் பார்த்தான். பள்ளி  அலுவலக எண். முக்கிய விசயமாக இருக்க வேண்டும். எடுத்துப் பேசினான்.

“சலாம் செக்கு. செக்கு அருண்  டெக்காட் மானா? அட இபுபாபா மாவு ஜும்பா செக்கு!” மாணவர்நல ஆசிரியர் திரு. ரஹ்மான்தான் பேசினார்.

“ஓகே, சயா டத்தாங் பெஜாபாட் செக்காராங் என்சிக்!” பேசிக்கொண்டே அலுவலகத்தை நோக்கி நடக்கத் தொடங்கினான்.

அவன் வகுப்பு மாணவன் கலைவாணனின் அப்பா அவனுக்காகக் காத்துக் கொண்டிருந்தார்.

“சார் உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்!” குரலில் தயக்கம் தெரிந்தது.

“ம்ம்ம் சொல்லுங்க!

“சார்.. கலை அடுத்த வருஷம் எஸ்.பி. எம்முக்குத் தமிழ் எடுக்கலன்னு பிடிவாதம் பிடிக்கிறான். அதான்... நேரா உங்கள பாத்து பேசலாம்னு வந்தோம்!”

“அதுக்கு நீங்க என்ன சொன்னீங்க?”

“பிடிக்காத பாடத்த எடுக்கிறதுக்கு ஏன் வற்புறுத்தனும் சார். அதான் நானும் சரின்னு சொல்லிட்டேன்!”

“அப்படியா... சரி! ஆனா, ஏன் பிடிக்கலன்னு சொன்னானா? சும்மா தெரிஞ்சிக்கலாம்னு கேக்கிறேன்!” வார்த்தைகளில் நிதானம் தெரிந்தது.

“தமிழ்ப் பாடத்தில அவன் இதுவரைக்கும் பாஸ் பண்ணதே இல்லையாம் சார். எஸ்.பி.எம்ல தமிழ்னால ஒரு ஜீ வரக்கூடாதுன்னு நெனைக்கிறான். அது தப்பில்லையே சார்!” மகனுக்கு ஆதரவாய்ப் பேச முயன்றார்.

“சரிங்க... ஆனா, கொஞ்சம் உங்க பையனோட ஐ.சி. நம்பர சொல்றீங்களா?” விரக்தியை வெளிக்காட்டிக் கொள்ளாமல் பணிவாய்க் கேட்டான்.

கைப்பேசியின் துணையுடன் கலைவாணனின் அடையாள அட்டை எண்ணைத் தட்டி சேப்சில் அவன் அரையாண்டுத் தேர்வுப் புள்ளிகளைப் பார்த்தான். மலாய் மொழியில் இருபத்தைந்து. அவனுக்குத் தூக்கிவாறிப் போட்டது. விருப்பப்பாடங்களைப் பார்த்தான். முப்பத்தைந்தைத் தாண்டவில்லை.

“இங்க பாருங்க இதான் உங்க மகனோட தேர்வு முடிவு. பாக்கப் போனா அவன் எந்தப் பாடமும் எடுக்க முடியாது. அப்புறம் ஏங்க தமிழை எடுக்கிறது மட்டும் உங்க மகனுக்குப் பிரச்சனையா இருக்கு, சொல்லுங்க?” குரலில் அழுத்தம் தெரிந்தது.

இப்பொழுது கலை அப்பாவின் மண்டைக்குள் அலாரம் அடித்திருக்க வேண்டும். 

சனி, 26 மார்ச், 2022

#குறுங்கதை 049 #கண் கெட்ட பின்...

 

கண் விழித்துப் பார்க்கிறேன். அம்மாவின் மடியில் நான். அம்மாவின் கைகளை என் கைக்குள் புதைத்து வைத்துக் கொள்கிறேன். பிடியை இறுக்கமாக்கிக் கொள்கிறேன்.

“ம்மா... என்ன(னை) மன்னிச்சிடுங்கம்மா. எனக்காக நிறைய தியாகம் பண்ணியிருக்கீங்க. நான் அத புரிஞ்சிக்காம உங்ககிட்ட ரொம்ப மோசமா நடந்துகிட்டேன். ஒரு நல்ல மகனா நடந்துக்க தவறிட்டேன். இனிமே சத்தியமா உங்கள தனியா விட மாட்டேன். உங்கள கண்ணுக்குள்ள வச்சி பாத்துக்குவேன். என்ன மன்னிச்சிட்டேன்னு ஒரு வார்த்த சொல்லுங்க. அப்பதான் என் மனசு ஆறும்!” கண்கள் குளமாக அம்மாவிடம் கெஞ்சுகிறேன். அம்மாவிடமிருந்து பதிலேதும் வரவில்லை. அவர் விழிகள் மட்டும் ஏதோ பேசுகின்றன. புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன். அவர் விழியோரங்களில் கண்ணீர் வடிந்து என் முகத்தை நனைக்கின்றது. கண்களை மூடித் திறக்கிறேன்.

      அம்மா போன இடம் தெரியவில்லை. என் அருகில் என் அன்பு மகன். அவன் கனவைக் கொன்று வாழ்க்கையை நரகமாக்கிய என்னை ஆழமாய்ப் பார்க்கிறான். மெதுவாய் எழுந்து அவனைத் தொட முயற்சிக்கிறேன். கைகளில் அகப்படாமல் தள்ளிச் செல்கிறான். எட்டிப் பிடிக்கிறேன். மேலும் தள்ளிச் செல்கிறான். தூர தூரச் சென்று கொண்டே இருக்கிறான். அவனைப் பிடிக்க முயற்சி  செய்து அலுத்துப் போகிறேன்.  

“அப்பாகிட்ட வாடா! அப்பாவ மன்னிக்க மாட்டீயாடா! தெரியாம செஞ்சிட்டேன். உன் மனச புரிஞ்சிக்காம இருந்திட்டேன். உன் இலட்சியத்த மதிக்காம என் விருப்பத்த உன் மேல திணிச்சிட்டேன். அதுக்குப் பரிகாரமா நான் என்ன செய்யனும்னு சொல்லுடா! இப்பவே செய்றேன்!” அவனிடத்தில் மன்றாடுகிறேன், சிலையாய் நிற்கிறான். அவனைத் தொட்டு விட நெருங்கிச் செல்கிறேன். காற்றில் கரைந்து போகிறான்.

இருள் என்னைச் சூழ்கிறது. பயத்தால் நடுங்குகிறேன். காப்பாற்றச் சொல்லிக் கத்துகிறேன், கதறுகிறேன். உதவுவார் யாருமின்றி கலங்குகிறேன்.

“என்னங்க... ஏன் பயப்படுறீங்க. உங்களுக்கு நான் இருக்கேன். என்கிட்ட வாங்க!” மனைவியின் குரல் ஆறுதல் தருகிறது. அந்த இருட்டில் அவளைத் தேடுகிறேன். கண்களில் தென்படவில்லை. இரண்டடி எடுத்து வைக்க, கால் தடுக்கி கீழே விழுகிறேன். நெற்றிப்பகுதி கல் தரையில் முட்டிக்கொண்டதோ என்னவோ, வலியால் துடிக்கிறேன். நெற்றியைத் தடவிப் பார்க்கிறேன். கையில் பிசுபிசுப்பு. வெளியே இடி மின்னல். உடல் நடுக்கம் அதிகமாகிறது. உடலைக் குறுக்கி அப்படியே கீழே உட்காருகிறேன். இடியும் மின்னலும் நிற்பதாய் இல்லை. மின்னலின் ஒளியில் மனைவியின் கல்லறையில் நிற்பது புரிந்து போனது.

“பானு... எல்லாத்துக்கும் சந்தேகப்பட்டே உன்ன கொன்னுட்டேன். நான் மனுசன் ரூபத்தில இருக்கிற அரக்கன் பானு. உன்ன மனுசியா நான் மதிச்சது இல்ல. ஒரு புருஷனா உன்கிட்ட பாசம் காட்டுனது இல்ல.  என்ன(னை) மன்னிச்சிரு பானு. சட்டம் எனக்கு தண்டன கொடுக்காம இருக்கலாம். ஆனா, தினம்தினம் என் மனசாட்சி என்ன கொல்லுது! ப்ளீஸ் பானு, என்ன மன்னிச்சிட்டேன்னு சொல்லு... ப்லீஸ்...!” மனைவியின் கல்லறை மேல் விழுந்து அழுகிறேன். நொடிப்பொழுதில் அவள் கல்லறை புகை மூட்டத்தில் மறைந்து போகிறது. 

தனிமை என்னைப் பயமுறுத்துகிறது. தூரத்தில் யாரோ இருவர். கூர்ந்து பார்க்கிறேன். கைகளில் கயிற்றுடன் வெறிகொண்ட பார்வையோடு அவர்கள் என்னை நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள். யாராவது என்னைக் காப்பாற்றுங்கள்! என் அழுகுரல் யாருக்காவது கேட்கிறதா

வெள்ளி, 25 மார்ச், 2022

#குறுங்கதை 048 #ஏங்குதே மனம்

 

மூன்று வார விடுமுறைக்குப் பிறகு எப்படியோ பள்ளிக்கு வந்தாகிவிட்டது. காரை விட்டு இறங்கி மண்ணில் கால் வைத்தபோது, உள்ளமெல்லாம் ஒரு வகை உணர்வு படரத் தொடங்கியது. அதை வார்த்தைகளால் விளக்கிட முடியுமா என எனக்குத் தெரியவில்லை. புதிதாய் வந்த ஆசிரியரைப் போல் பார்வையாலே பள்ளி வளாகத்தைப் அளவெடுத்தேன். கடந்த பத்து ஆண்டுகளாக இந்தப் பள்ளியில்தான் பணியாற்றி வருகிறேன்.  எத்தனை எத்தனை அனுபவங்கள்! எத்தனை எத்தனை நினைவுகள்! மனம் லேசாய்க் கனக்கத் தொடங்கியது. மீண்டும் காருக்குள்ளே அமர்ந்துகொண்டேன். என்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டேன்.

ஒவ்வொரு நாளும் நான் காரை விட்டு இறங்கும்போது மாணவர்க் கூட்டம் ஒன்று என்னைச் சூழ்ந்து கொள்ளும். இன்று அந்தக் கூட்டத்தைப் பார்க்க முடியவில்லை. கையிலுள்ள மடிக்கணினிப் பையைப் பிடுங்காத குறையாய் வாங்கி மாட்டிக் கொள்ளும் இரண்டாம் படிவ மாணவன் ரமணன், அவனும் இன்று இல்லை. என்னைப் பார்த்ததும் ஓடி வந்து கட்டிக்கொள்ளும் முதலாம் படிவ மாணவிகள் ஹேமாவும் திவ்யாவும்கூட இன்று இல்லை. நான் அணிந்து வரும் சாதாரண உடையையும் பெரிதாய்ப் பாராட்டிப் பேசும் பவித்திராவையும் காணவில்லை. மனம் வெறுமையாய் தோன்றியது. குடும்ப உறவுகளோடு விடுமுறையைக் கழித்தபோது இருந்த மகிழ்ச்சிக்கு அளவில்லைதான். ஆனால், அந்தக் காலக்கட்டத்திலும் இவர்களின் ஞாபகங்கள் என்னுள் எட்டிப் பார்ப்பதை என்னால் தடை செய்ய முடிந்ததில்லை.

கடந்த முப்பது  ஆண்டுகளில் மாணவர்களோடு இருந்ததுதான் அதிகம். என் மாணவர் ஒவ்வொருவரையும் நான் அறிவேன். அவர்கள் பார்வையை வைத்தே அவர்களின் மனநிலையை என்னால் கணித்துவிட முடியும். அதுவே என் பலமாகவும் இருந்தது என்பதுதான் உண்மை. கணவன் மனைவி பிரிவில் எதிர்காலத்தை இழந்த எத்தனையோ மாணவர்களைப் பார்த்திருக்கிறேன். கண்மூடிக் காதலால் குடும்பத்தை உதறிவிட்டு வீட்டை விட்டு ஓடிய மாணவிகளை மறக்க முடியுமா என்ன! அவர்களுக்காகவும் அவர்கள் பெற்றோர்களுக்காகவும்  எத்தனை இரவுகள் அழுதிருக்கிறேன். பள்ளிக்குப் பிள்ளைகளை அனுப்ப முடியாது என முரண்டு பிடித்த பெற்றோரிடம் மன்றாடிய நாட்கள் கண் முன் வந்து போயின. தடம் மாறிப் போன பிள்ளைகளைப் பற்றி பெற்றோரிடம் புகார் சொல்லி, வாங்கிக் கட்டிக் கொண்ட இருண்ட நாட்களை எண்ணிப் பார்க்கிறேன். இப்பொழுது நினைத்தாலும் உடம்பெல்லாம் நடுங்குகிறது. என் மாணவர்களுக்காக வாழ்ந்திருக்கிறேன் என்பதில் மனம் திருப்தி கொள்கிறது.

கடந்த கால நினைவுகளின் தாலாட்டில் இன்றைய வருகைப் பதிவை மறந்தே போனேன். பள்ளி அலுவலகத்தை நோக்கி ஓட முடியாமல் ஓடுகிறேன். இதுவே என் கடைசி வருகைப் பதிவு. இன்னும் ஆறு மணி நேரத்தில் மாணவர்களின் நினைவுகளோடு மட்டுமே விடைபெறப் போகிறேன். 

வியாழன், 24 மார்ச், 2022

#குறுங்கதை 047 #அப்பா

 

பல வருடங்களுக்குப் பிறகு சிங்கப்பூரிலிருந்து என் மகன் என்னைப் பார்க்க வந்து விட்டான். அதுவும் குடும்பத்தோடு வந்ததைப் பார்த்தபோது மனம்  திருப்தி கொண்டது. இதுவரை என்னைப் பற்றி கவலைப்படாதவன், எனக்காக இன்று வந்து நிற்கிறான். என் அருகில் நின்று பேசத் தயங்கியவன், என்னை தொட்டுத் தொட்டுப் பார்க்கிறான். கன்னங்களை வருடிக் கொடுக்கிறான். நெற்றியில் முத்தமிடுகிறான். எல்லாம் மாயை போல் தோன்றுகிறது.  மனம் நிறைகிறது.

மருமகளும்கூட என் அருகிலேயே நின்று கொண்டாள். தம் பிள்ளைகளையும் என்னை விட்டு நகராமல் பார்த்துக் கொண்டாள். மூத்த பேரன் மூன்று வயதாக இருந்தபோது பார்த்தது. இப்போது எப்படியும் எட்டு வயதாகியிருக்க வேண்டும். என் மகன் சாயலில் இருந்த அவனைப் பார்க்கப் பெருமையாய் இருந்தது. என் வம்சமடா நீ எனச் சொல்லிக் கட்டித் தழுவிக்கொள்ளத் தோன்றியது. அவன் கன்னங்களில் உள்ள குழி என் மனைவி சாரதாவை நினைவுப்படுத்தியது. இரண்டு மூன்று வயதில் இன்னொருவன் என் மருமகளைக் கட்டிப்பிடித்துக்கொண்டு நின்று கொண்டிருந்தான். அடிக்கடி என் முகத்தைப் பார்க்கிறான். என்னை அவனுக்குத் தெரிய வாய்ப்பில்லை. யாரெனக் கேட்டு அவன் அம்மாவைத் தொல்லைப்படுத்தினான். அவன் வாயை மூடி அமைதியாக இருக்கச் செய்தாள் மருமகள். என்னைக் கருணையோடு பார்த்தாள். என் கால்களில் விழுந்து வணங்கினாள்.

“நல்லா இரும்மா. சுமங்கலியா நூறு வருஷம் நீ வாழனும். அது ஏன் நூறு வருஷம்? அதுக்கும் மேலேயே என் பிள்ளையோட, என் பேரப்பிள்ளைங்களோட நீ சந்தோசமா வாழனும்!” மனதார வாழ்த்தினேன்.

“அப்பாவுக்கு எந்தக் குறையும் வச்சிராதீங்க!” என் மகனின் வார்த்தைகள் என் இதயத்தை நெகிழச் செய்தன. எவ்வளவு உணர்வுப்பூர்வமான வார்த்தைகள்!

இதற்காகத்தானே இவ்வளவு நாள் ஏங்கிக் கொண்டிருந்தேன். என் மனைவி இருந்தவரை நான் அன்புக்காக ஏங்கித் தவித்ததில்லை. அவள் தவிக்க விட்டதும் இல்லை. கேட்காமலேயே அன்பை அள்ளிக் கொட்டித் திணறடிப்பாள். விழுந்து விழுந்து உபசரிப்பாள். ஒரு நாளும் பசி வந்து உண்டதில்லை. தாயாக, தோழியாக, மனைவியாக இருந்து ஒரு நாள் சொல்லாமலேயே செத்துப் போனாள். அந்த வலி, அந்தப் பிரிவு என்னை உலுக்கி எடுத்தது. உலகமே வெறுமையாய்த் தோன்றியது. வாழும் வாழ்க்கைக்கு அர்த்தமில்லையென அப்பொழுதான் முதன்முதலாக உணரத் தொடங்கினேன்.

      என் எதிர்பார்ப்பு என் மகனிடம் திசை திரும்பியது. ஆனால், அதுவே அவனுக்குத் தொல்லையாக உருவெடுத்தபோது, என்னால் யாருக்கும் துன்பம் வேண்டாமென முடிவெடுத்தது என்னமோ உண்மைதான். ஆனால், பாழாய்ப்போன மனது கேட்கவில்லையே! சற்று முன்பு வரை அந்த அன்புக்காக ஏங்கித்தான் போயிருந்தேன். மிப்பொழுது அதற்கு அவசியமில்லாமல் போய் விட்டது. என்னைச் சுற்றி எனக்காகக் கூடி நிற்கும் சொந்தங்களைப் பார்க்கிறேன். இப்படித் தெரிந்திருந்தால் எப்போதோ உயிரை விட்டிருப்பேனே! 

புதன், 23 மார்ச், 2022

#குறுங்கதை 046 #அன்னதானம்

 


நூறு பேருக்கு அன்னதானம் என்றபோது அவனுக்குப் பெருமையாய்தான் இருந்தது. சிறியதாய் முதல் போட்டு வியாபாரத்தைத் தொடங்கியபோது அவனுக்கு அவன் மேலேயே நம்பிக்கை இல்லை. ஆனால், இன்று பெரிய லாபத்தைப் பார்த்தபோது பிரமித்துப் போனான். இந்த வெற்றிக்குக் கடவுள்தான் காரணம். அதற்கு நன்றிக் கடனாகத்தான் இன்று இந்த அன்னதானம்.

வெள்ளிக்கிழமை என்பதால் கூட்டம் கொஞ்சம் அதிகமாக இருந்தது. ஆளைத் தேடிப் பிடித்து அன்னதானம் கொடுக்க வேண்டிய நிலை இல்லை. கோயில் பூசை முடிந்ததும் பக்தர்கள் வரிசையில் நிற்க, ஒவ்வொரு பொட்டலமாக எடுத்துக் கொடுத்தான். சிறியவர் பெரியவர், இளைஞர்கள், வயதானவர்களென உணவுப் பொட்டலத்தை வாங்கிக் கொண்டனர். அன்னதானம் செய்யும் முன்பே தனக்கும் தன் மனைவிக்கும் மறக்காமல் இரண்டு பொட்டலங்களை ஒதுக்கி வைத்துக் கொண்டான். அது ஏனோ தெரியவில்லை, கோயில் சாப்பாடு என்றாலே அது தனி ருசிதான். இந்த கோயில் உணவுக்காக அவன் முண்டியடித்துக்கொண்டு வரிசையில் நின்ற நினைவு மனக்கண்ணில் வந்து போனது.

மும்முரமாய் உணவுப் பொட்டலங்களை எடுத்துக் கொடுக்க ஆரம்பித்தவனுக்கு நேரம் போனதே தெரியவில்லை. இன்னும் சில பொட்டலங்களே மிஞ்சி இருந்தன. வரிசையில் நிற்பவர்களுக்குப் போதுமானதாக இருக்குமென மனத்தில் கணக்குப் போட்டுக் கொண்டான்.

“தம்பி... இன்னொன்னு கெடைக்குமா?” தன் முன் நின்ற பெரியவர்  கெஞ்சி கேட்க, அவரை நிமிர்ந்து பார்த்தான்.

“முடியாது தாத்தா. ஒரு ஆளுக்கு ஒன்னுதான்!” தெளிவாய்ச் சொன்னான். பெரியவரின் முகம் சுருங்கிப் போனது. புன்னகை மறைந்து போனது. ஒவ்வொருவருக்கும் இப்படிக் கூடுதலாகக் கொடுத்தால், மற்றவர்களுக்குப் இல்லாமல் போய் விடாதா?

அடுத்து ஒவ்வொருவராக அவனிடம் உணவுப் பொட்டலத்தை வாங்கிக் கொண்டனர். வாங்கியவர்கள் முகத்தில் மகிழ்ச்சி. அவனுக்கும் அந்த மகிழ்ச்சி தொற்றிக் கொண்டது. அன்னதானத்தைச் சிறப்பாய்ச் செய்து முடித்து விட்டதில் பூரண திருப்தி. தொடர்ந்து தன் வியாபாரம் பெருகி, லாபம் கூட வேண்டுமென மனதார வேண்டிக் கொண்டான். மூலவர் முருகப்பெருமானின் நாமத்தை உச்சரித்துக் கொண்டே கன்னத்தில் போட்டுக் கொண்டான்.

மணியாகிக் கொண்டிருந்தது. வீட்டில் மனைவி பசியோடு காத்திருப்பாள். விரைந்து சென்று விபூதியை இட்டுக் கொண்டான். கொஞ்சம் விபூதியை தாளில் மடித்து எடுத்துக் கொண்டான். கோயில் வாசலை வந்தடைந்தான்.  சற்று முன் கூடுதல்  உணவுப் பொட்டலம் கேட்ட பெரியவர் மீண்டும் அவன் முன் வந்து நின்றார்.

“தம்பி... சாப்பாடு ஏதும் மிச்சம் இருக்கா!” கேட்டுக்கொண்டே அவனைக் கூர்ந்து பார்த்தார். அவனும் பார்த்தான். அவரது ஒட்டிப் போன முகம் அவனை ஏதும் செய்யவில்லை.

“அதான் மொதல்லேயே சொன்னனே தாத்தா. சாப்பாடு முடிஞ்சு போச்சு!”

“ம்ம்ம்... அப்படியா! பரவாயில்ல தம்பி, என் பொண்டாட்டிக்குக் கொடுத்து வைக்கல!” வருத்தப்பட்டுக் கொண்டு, திரும்பிச் சென்றார் பெரியவர்.

வீட்டிற்குக் கிளம்பும் முன் கடைசியாய்க் கடவுளுக்கு பெரிய குப்பிடு போட மனம் எண்ணியது. வாசலில் இருந்துகொண்டே கைகளை மேலே தூக்கி ஓம் சரவண பவ  என உச்சரித்துக் கொண்டே மூலஸ்தானத்தைப் பார்த்தான். சற்று முன் கம்பீரமாய்க் காட்சியளித்த முருகப் பெருமானின் திருவுருவம் அவன் கண்களுக்கு ஏனோ புலப்படவில்லை. 

செவ்வாய், 22 மார்ச், 2022

#குறுங்கதை 045 #தன்மானம்

 


அலுவலகத்தில் நுழைந்ததிலிருந்து மாதவனின் மனப்போராட்டம் கூடிக்கொண்டே போனது. அலை பாயும் தன் சிந்தனையை அடக்கப் பார்த்தான். அதற்கு வாய்ப்பில்லையெனத் தெள்ளத் தெளிவாய்த் தெரிய, தலையைப் பிடித்துக் கொண்டு நாற்காலியில் அப்படியே சாய்ந்து கொண்டான். நேற்று தன் முதலாளி சொன்ன வார்த்தைகள் அவன் காதுகளில் இன்னும் இடைவிடாது ஒலித்துக் கொண்டிருந்தன. தனக்குக் கல்வித் தகுதி இருந்திருந்தால் நேற்றே வேலையைத் தூக்கியெறிந்து விட்டுச் சென்றிருப்பான். வழியற்றவனுக்கு மானம் எதற்கு? மரியாதை எதற்கு?

 தன்மானத்தை அடகு வைத்து விட்டு இன்று வழக்கம்போல் வேலைக்கு வந்து விட்டான். நேற்று அவன் பட்ட அவமானத்தை எத்தனை பேர் வேடிக்கை பார்த்தனர்! நினைத்தாலே அவன் உடம்பெல்லாம் கூசியது. பொறுப்பில்லாதவன், திறமையில்லாதவன் என முதலாளி வசை பாடியபோது, சிலர் முகத்தைச் சுளித்துக் கொண்டதை அவன் கவனிக்கத் தவறவில்லை. சிலர் அவனைப் பார்த்து ஏளனமாய்ச் சிரித்ததை நினைக்க நினைக்க பற்றிக் கொண்டு வந்தது.

      இன்னும் எத்தனை நாளுக்கு இப்படிக் கூனிக் குறுகிச் சேவகம் செய்வது? முதுகெலும்பு வளைந்து போகும் வரை அவன் வளைந்து கொடுத்து விட்டான். இனியும் முடியாது, நிமிர்ந்து நில்லெனத் தன்மான உணர்வு சொல்ல மனத்தில் பெரும் யுத்தம் நடக்கத் தொடங்கியது.  தாக்குதல் நிமிடத்திற்கு நிமிடம் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருந்தது. ஈட்டிகளால் யாரோ இதயத்தைக் கிழித்துப் பதம் பார்ப்பதாய் உணர்ந்தான். வலி தாங்க முடியாமல் மௌனமாய் அழுதான்.

      முதலாளியின் ஆணவம் அவனை ஆழம் பார்ப்பதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இன்று ஒரு முடிவெடுத்தாக வேண்டும். நாற்காலியை விட்டு ஒரு முடிவோடு எழுந்தான். முதலாளியின் அறைக்குச் சென்றான். முகத்திற்கு நேராக பேசுவதைத் தவிர வேறு வழியில்லை. நாற்காலியை இழுத்துப் போட்டு முதலாளியின் முன் கம்பீரமாய் அமர்ந்துகொண்டான். முதலாளியின் கண்களை நேருக்கு நேர் பார்த்தான். அவன் சுட்டெரிக்கும் பார்வையைத் தாங்க முடியாமல் முதலாளியின் பார்வை தாழ்ந்து போவதை அவன் கவனிக்கத் தவறவில்லை..

“இதோ பாரு கயல். நீ சொல்றதுக்கு எல்லாம் இனி மேல என்னால தல ஆட்ட முடியாது. அடிமை மாதிரி கையைக் கட்டி நிக்க முடியாது. ஒன்னு  உன் புருஷனா, ஒரு குடும்பத் தலைவனா இங்க நான் வேல செய்யறேன். இல்ல ஒரு முதலாளியா நீ இங்க வேல செய். இதுல ஏதாவது ஒன்னுதான் நடக்கனும். அதுதான் எனக்கும் மரியாத. உனக்கும் மரியாத. முடிவு பண்ணி சொல்லு. நான் கெளம்பறேன்!” பதிலுக்குக் காத்திராமல் முதலாளியின் அறையை விட்டு வெளியேறினான் மாதவன். 

திங்கள், 21 மார்ச், 2022

#குறுங்கதை 044 #மூட்டைப்பூச்சிகள்

 

    மருமகளின் உபசரிப்பில் ஆடித்தான் போனாள் மருதம்மாள். கணவனின் இறப்பிற்குப் பின் ஏனோ தெரியவில்லை மருமகளின் நடவடிக்கைகளில் இமாலய மாற்றம். இதுவரை தன்னை ஒரு பொருட்டாக மதிக்காதவள், இப்பொழுதெல்லாம் தலையில் வைத்துக் கொண்டாடுகிறாள்.  எல்லா வேலைகளையும்  தலைமேல் போட்டுக் கொண்டு செய்கிறாள். சிரித்துச் சிரித்துப் பேசுகிறாள். அவள் தனிமைப்படுத்திக்கொள்ளும் வேளைகளில் தேடி வந்து பேச்சுக் கொடுக்கிறாள்.   மருமகளின் திடீர்ப் பாசத்தின் பின்னால் மறைந்திருக்கக் கூடிய வஞ்சகத்தை அவளால் ஊகிக்க முடியாமல் எல்லாம் இல்லை.

      தன்னைச் சுற்றிப் பின்னப்படும் வலையில் சிக்கி விடக் கூடாது. சுதாகரிக்கொள்ள வேண்டும்.  தனக்குத் தானே நினைவூட்டிக் கொண்டாள் மருதம்மாள். தன் மகள் கவிதாவின் காதில் இதைப் போட்டுக் வைக்க வேண்டுமெனத் தீர்மானித்துக் கொண்டாள். காலையிலேயே எழுந்ததும் முதல் வேலையாக அலைபேசியில் அழைத்துப் பேசியவளுக்கு, மகள் சொன்ன வார்த்தைகள் பேரிடியாய் வந்து விழுந்தன.

தன் மருமகள் தன் சொத்துக்கு அடி போடுவதை அவளால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. இதிலிருந்து தப்பிப்பது சாமானியமான காரியமல்ல என்பது மருதம்மாளுக்குப் பிறர் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை.

மகனிடமும் நாசுக்காகப் பேசிவிட வேண்டும். அவன் மனைவியின் முகத்திரையைச் சரியான நேரத்தில் கிழித்து விட வேண்டும். அவள் அவமானப்படுவதைக் கண் குளிரப் பார்க்க வேண்டும். எத்தனை பேரைத் தன் வாழ்நாளில் பார்த்திருப்பாள். தானும் அவர்களுள் ஒருவராக ஆகிவிடக்கூடாது. மாமியார்களும் புத்திசாலிகளாகி விட்டார்கள் என்பதை நிருபிக்க வேண்டுமென்ற எண்ணம் மனத்தில் தீயாய்ப் பற்றிக் கொண்டது.

மூட்டைப்பூசிகளாய் உறவுகளின் இரத்தத்தை உறிஞ்சிச் சுகம் காணும் நயவஞ்சகர்களின் பட்டியலில் தன் மருமகளும் இருப்பது ஏமாற்றத்தைத் தந்தது. “இவளுக்கு நல்ல பாடம் கற்பிக்க வேண்டும். இல்லையென்றால் ஆட்டம் எல்லை மீறிப் போய்விடும். சுதாகரித்துக் கொள் மருது” மனசாட்சியின் குரல் எச்சரிக்கை விட்டுக் கொண்டிருந்தது.

காலையில் தன்னை வங்கிக்குச் செல்லத் தயாராகச் சொன்ன மருமகளின் சுயரூபம் இன்று தெரிந்து விடும். மகளை இரகசியமாய் வங்கிக்கு வரச் சொன்ன தன் திறனை எண்ணி உள்ளுக்குள் பூரித்துப் போனாள்.

“அத்த...! உங்க ஐ.சி. தேவைப்படுது. கொஞ்சம் எடுத்துத் தாங்களேன்”

“எதுக்கு?” புருவங்களை உயர்த்தினாள் மருதம்மாள்.

“அது வந்து அத்த, உங்களுக்கு எக்கவுண்ட் திறக்கணும். மாமா இல்லன்னு கவலப்படாதீங்க. துணி தைக்கிற காசுலலேர்ந்து மாசம் முந்நூறு வெள்ளி உங்க எக்கவுண்டல போறேன். அத உங்க கைச்செலவுக்கு வச்சிக்குங்க. அவருகிட்ட சொல்ல வேணாம் அத்த, சரியா!”

விக்கித்து நின்றாள் மருதம்மாள். மறைந்து நிற்கும் மகளிடம் அவளுக்கு எதையும் சொல்லத் தோன்றவில்லை.

ஞாயிறு, 20 மார்ச், 2022

#குறுங்கதை 043 #பட்டதாரி

 


அன்பு மகளின் பட்டமளிப்பு விழா. நான்கு ஆண்டு உழைப்பிற்கான பலனைக் கண்னிறைய கண்டு மகிழும் நாள். காலையிலேயே குடும்ப உறவுகளோடு பல்கலைக்கழக வளாகத்தை அடைந்து விட்டதில் மகிழ்ச்சி. மகளுக்குப் பளபளக்கும் தங்கச் சங்கிலியைப் பரிசாக அணிவிக்கும் நேரத்திற்காக ஆர்வமாய்க் காத்திருந்தேன். வீட்டின் முதல் பட்டதாரி. கௌரவப்படுத்துவது எங்கள் கடமையல்லவா!

எங்களுக்கு முன்னே கூட்டம் கூடத் தொடங்க்யிருந்தது. மனமெல்லாம் விவரிக்க முடியாத உணர்வு பரவிக் கிடந்தது. மகிழ்ச்சியா, பூரிப்பா, பெருமிதமா என அறுதியிட்டுக் கூற முடியவில்லை. கணவரின் முகத்தில் ஆயிரம் கோடி சூரிய பிரகாசம். தாத்தாவின் செல்லம் என்பதால் அப்பாவோடு தாத்தாவும் மண்டபத்திற்குள் சென்றுவிட நான் வெளியே பிள்ளைகளோடு அமர்ந்துகொண்டேன்.

பிள்ளைகள் கைப்பேசியில் மூழ்கிப் போக, நான் என்னைச் சுற்றியிருந்த கூட்டத்தின் ஆரவாரத்தில் திளைத்துப் போனேன். எத்துணை மகிழ்ச்சி! எத்துணை ஆர்ப்பரிப்பு. பிள்ளைகளின் வெற்றியைக் கொண்டாட ஏக்கமாய் காத்திருக்கும் பார்த்தறியா முகங்கள்! இந்த ஒரு நாளுக்காக, இந்த ஒரு வெற்றிக்காக இந்தப் பிள்ளைகள் எப்பேர்ப்பட்ட தியாகங்களைச் செய்திருக்க வேண்டும்! பெற்றோர்கள் எவ்வளவு இழந்திருக்க வேண்டும்! மனம் எங்கெங்கோ அலைந்து விட்டு வர, நீண்ட பெருமூச்சு அழைப்பின்றி வந்து போனது. 

“சுசி... நீ இங்கயே இருக்கிறீயா? நான் போயி மகளுக்குப் பூவு வாங்கிட்டு வரேன்!” பக்கத்திலிருந்து குரல் வர திரும்பிப் பார்த்தேன். மெலிந்த தேகம். ஒட்டிய முகம். மிகச் சாதாரணமான நீல நிறச் சட்டை, கருப்புக் காற்சட்டை, காலில் கருப்பு நிற சிலிப்பர். காட்டன் சேலை   அணிந்திருந்த அவர் மனைவியைப் பார்த்தேன். இருவருக்கும் அறுபதைத் தாண்டியிருக்க வேண்டும்.

“வெல கூட உள்ள பூவ வாங்கிற போறீங்க. பாத்து வாங்கிட்டு வாங்க. பஸ்ஸுக்கு வேற காசு வேணும்!” நினைவுறுத்தி அனுப்பினார் அன்பு மனைவி. பெரியவர் தலையைப் பலமாய் ஆட்டிக் கொண்டார். ஏனோ அவர்களும் உள்ளே போகாமல் வெளியே காத்திருந்தனர். என் பார்வை அவர்களை விட்டு அகல மறுத்தது. பெரியவர் அங்கிருந்த கடைகளை நோக்கி நடைபோட ஆரம்பிக்க, என் மனமும் அவரைப் பின் தொடர்ந்தது. கொஞ்ச நேரத்தில் பார்வையிலிருந்து மறைந்து போனார்.

அவர் மனைவியின் நினைவு வந்தது. பட்டெனத் திரும்பிப் பார்த்தேன். உட்கார்ந்த இடத்தை விட்டு நகரவில்லை. கணவன் சென்ற வழிமேல் அவர் பார்வை ஆழமாய்ப் பதிந்திருந்தது. அவரது மிரட்சி கண்களில் தெரிந்தது. பத்து பதினைந்து நிமிடங்களில் கணவர் முகம் காட்ட, மனைவி உற்சாகமானார். தன்னை அரண் அமைத்துப் பாதுகாக்கும் காவலன் வந்துவிட்ட திருப்தி முகத்தில் தெரிந்தது. என் முகமும் சேர்ந்தே மலர்ந்தது. வந்தவர் மனைவியின் பக்கத்தில் மெதுவாய் அமர்ந்துகொண்டார்.

“எல்லா பூவும் ரொம்ப வெல சுசி. அறுபது வெள்ளி பூதான் கெடைச்சது. வாங்கிட்டு வந்திட்டேன். இந்தப் பூ முக்கியம் இல்ல. அடுத்து நம்ம பொண்ண மாஸ்டர்ஸ் படிக்க வைக்கனும். அதான் ரொம்ப முக்கியம்,” சொல்லிவிட்டு பார்வையைக் கூடி நின்ற கூட்டத்தின் மேல் ஓட விட்டார் பெரியவர்.

“பணத்துக்கு எங்க போறது?” வருத்தமும் கவலையும் மனைவியின் குரலில் இழையோடின.

“என்னோட இ. பி. எப். இருக்குல்ல. அத வச்சு படிக்க வைக்கலாம். பிள்ள ரொம்ப ஆசப்படுது, பாவம்”

கணவனையே பார்த்துக் கொண்டிருந்த மனைவியின் கண்ணீர்த்துளிகள் கன்னங்களை நனைத்தன.  என் மனம் பாரமாவதை உணர்ந்தேன். கையிலிருந்த தங்கச் சங்கிலியைப் பார்த்தேன். முன்பிருந்த பளபளப்பு இப்பொழுது இல்லை. 

#குறுங்கதை 100 #நூறாவது நாள்

    எத்தனை எத்தனையோ போராட்டங்கள், சவால்கள், தடைகள். கடந்து வந்த மாயம் தெரியவில்லை. ஏடுகள் ஒவ்வொன்றாய்ப் புரட்டிப் பார்த்தான் வெற்றிமாறன். தொ...